அரசு விழாக்களில்.. தேசிய கீதத்திற்கு முன்பாக இனி வந்தே மாதரம் பாடப்பட வேண்டும்!

Su.tha Arivalagan
Feb 11, 2026,10:44 AM IST

டெல்லி: அரசு விழாக்களில் இனி தேசிய கீதத்திற்கு முன்பாக வந்தே மாதரம் பாடல் பாடப்பட வேண்டும் என்ற புதிய முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது.


மத்திய உள்துறை அமைச்சகம் வந்தே மாதரம் தேசியப் பாடல் தொடர்பான புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில் பல முக்கிய அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.


இனி வரும் காலங்களில் அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும், பள்ளிகளிலும் தேசிய கீதமான ஜன கண மன இசைக்கப்படுவதற்கு முன்பாக வந்தே மாதரம் பாடல் கட்டாயம் இசைக்கப்பட வேண்டும்.


அரசு நிகழ்ச்சிகள் மற்றும் பள்ளிகளில் இந்தப் பாடல் இசைக்கப்படும்போது, அங்கிருப்பவர்கள் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.




பத்ம விருதுகள் போன்ற உயரிய விருது வழங்கும் விழாக்கள் மற்றும் குடியரசுத் தலைவர் பங்கேற்கும் பிற நிகழ்ச்சிகளில், அவர் வருகை தரும்போதும் மற்றும் புறப்படும்போதும் இந்தப் பாடல் இசைக்கப்பட வேண்டும்.


பொது இடங்களான திரையரங்குகளில் இந்தப் பாடல் இசைக்கப்படலாம். இருப்பினும், திரையரங்குகளில் இந்தப் பாடல் ஒலிக்கப்படும்போது பொதுமக்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்துவது கட்டாயமல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


முழுப் பாடலும் பாடப்பட வேண்டும்


அதேபோல இன்னொரு முக்கிய உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு சில பகுதிகள் நீக்கப்பட்டிருந்த நிலையில், இனி வரும் காலங்களில் வந்தே மாதரம் பாடலின் அனைத்து ஆறு சரணங்களும் இசைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.


இந்த விதிமுறைகளை மீறுபவர்கள் அல்லது தேசியப் பாடலுக்கு அவமதிப்பு ஏற்படுத்துபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும், அதற்கு அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.