காற்றே உன் பெயரைக் கேட்டேன்
- பன்முகக் கவிஞர் க.முருகேஸ்வரி
வடக்கிலிருந்து வாட்டும்போது
வாடையானாயே
கிழக்கிலிருந்து வீசும்போது
கொண்டல் என்றாயே
மேற்கிலிருந்து வந்ததினால்
நீ மேலை ஆனாயே
தெற்கிலிருந்து தாலாட்டி
தென்றல் என்றாயே
பருவமழை கொண்டு வந்து
பருவக்காற்றும் ஆகிறாய்
புயல் என்றும், சூறாவளி என்றும்
சுழற்றி வெளுத்து விடுகிறாய்
உப்பங்காற்று
ஊளைக்காற்று
என்று உயிரை வதைக்கிறாய்
குன்னுவாடை என்ற பெயரில்
குளிரால் நடுங்க வைக்கிறாய்
அம்மிக்கல்லையும் பறக்க விட
ஆடியில் வருகிறாய்
எனக்குள் நீ வரும்போதோ
ஆக்சிஜன் ஆகின்றாய்
உன் ஆற்றலாலே
மின்சாரம் உற்பத்தி செய்கின்றாய்
பட்டம் முதல் பாராசூட் வரை
பறக்க வைக்கின்றாய்
இயற்கை எரிவாயு என்ற பெயரில்
சமையல் செய்கின்றாய்
உயிர்கள் அனைத்திற்கும் உயிர்வளியே
உயிர் நாடி என்கின்றாய்
அகிலமெல்லாம் தழைத்தோங்க
நீயே ஆதாரம் ஆகின்றாய்
மரங்கள் நட்டு மாசைக் குறைத்து
உனைப் போற்ற வேண்டுமே
நெகிழி ஒழித்து
புகையைத் தவிர்த்து
உலகை மாற்ற வேண்டுமே
உன்னதமான காற்றை உண்டு
உயிர் வாழ வேண்டுமே
உன்னைப் போல எண்ணிலடங்கா
பெயர் சூட்டி
எனைப் பார் புகழ வேண்டுமே
(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார். சிங்கப்பூர் பொழில் பண்பலையில் கவிதைகள் எழுதுகிறார்.. சிங்கப்பெண், அருந்தமிழ் தாரகை விருதுகள் பெற்றுள்ளார்).