எளிதில் மந்திரியாக எளிய வழி!
- ராஜஸ்ரீ அஎன்கிற வி.பி.ஸ்ரீநிவாசன்
ஒருவனுக்கு ஒரு நாள் காலை வயிற்றை பிரட்டியது. வாந்தியும் வந்தது.
டாக்டரிடம் சென்றான். அவர் அஜீரண கோளாறுதான். இன்றைக்கு ஒரு நாள் மட்டும் எதையும் சாப்பிடாதீர்கள் என்றார்.
அவன் சிந்தித்தான்.
சாப்பிடாமல் நாள் முழுவதும் வீட்டிலேயே இருப்பது எப்படி? மற்றவர்கள் சாப்பிடும்பொழுது நமக்கும் பசிக்குமே. என்ன செய்வது?
உடனே அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. அதன்படி செய்யலாம் என முடிவு செய்தான்.
வீட்டிற்கு வந்ததும் ஒரு அட்டையில் உண்ணாவிரதப் போராட்டம் என எழுதி வாசலில் நாற்காலி போட்டு அமர்ந்து கொண்டான்.
இந்த விஷயம் தெருவெங்கும் பரவ எல்லோரும் வந்து அவனை பார்த்து எதற்காக உண்ணாவிரதம் இருக்கிறீர்கள் என்று கேட்டனர்.
தெருவில் கழிவு நீர் ஆறாக ஓடுகிறது. குப்பைகள் எடுக்கவில்லை. அதனால் அவற்றை உடனே சரி செய்ய சொல்லி உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறேன் என்றான்.
இந்த விஷயம் கவுன்சிலருக்கு செல்ல அவர் வந்து விரைவில் சரி செய்து விடுவோம் என்றார்.
இப்படித்தான் ஒவ்வொரு முறையும் சொல்லி ஏமாற்றுகிறீர்கள். நான் கேட்க மாட்டேன் என்றான்.
விஷயம் இன்னும் வேகமாக பரவ MLA வந்து பேசிப் பார்த்தார். அவன் மசியவில்லை.
கடைசியாக முதல்வரே மாலை 6 மணி அளவில் வந்து நாளையே சீரமைக்கும் பணி துவங்கி விடும் என்று உறுதி அளித்தார்.
இவனும் பழரசம் அருந்தி உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டான். வயிறும் சரியாகிவிட்டது. தமிழ்நாடு முழுவதும் இவன் பிரபலமாகி விட்டான்.
மறுநாள் நாளிதழ்களில் இதுதான் செய்தி.
இதை அறிந்த டாக்டர் ஒரு நாள் சாப்பிட வேண்டாம் என்று சொன்னதுக்கே தமிழ்நாடு முழுவதும் பிரபலமாகி விட்டாரே. ஒரு வாரம் சாப்பிட வேண்டாம் என்றால் நாடு முழுவதும் பிரபலமாகி விடுவார் போலிருக்கிறதே என்று அசந்து போய்விட்டார்.
இவனை ஒரு எதிர்க்கட்சி பாராட்டி தன் கட்சியில் சேர்த்துக் கொண்டது. தேர்தல் வந்தது. ஆளும் கட்சி தோற்றது. இவனை சேர்த்துக் கொண்ட எதிர்கட்சி வெற்றி பெற்றது.
உடனே இவன் மந்திரியாகி விட்டான்.
இதை அறிந்த டாக்டர் நாமும் இந்த டாக்டர் தொழிலை விட்டு விட்டு இவனைப் போல் உண்ணாவிரதம் இருந்து மந்திரியாகிவிடலாமா? என யோசித்தார்.
(ராஜஸ்ரீ என்கிற வி.பி.ஸ்ரீநிவாசன், அம்பத்தூர், ஓய்வு பெற்ற மத்திய அரசு அலுவலர்)