வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் ஓடத் தொடங்கியது.. 18 வருஷக் கனவு பூர்த்தியாச்சு!
சென்னை: சென்னை வேளச்சேரி - பரங்கிமலை இடையே கடந்த 18 வருடமாக இழுபறியாக இருந்து வந்த பறக்கும் ரயில் சேவை ஒரு வழியாக இன்று தொடங்கியது. இதன் மூலம் இப்பகுதி மக்களின் நீண்ட கால கனவு நனவாகியுள்ளது.
வேளச்சேரியிலிருந்து கிண்டி, தாம்பரம் மார்க்கத்தில் செல்வது தற்போது எளிதாகியுள்ளது. அதேபோல கிண்டி, சைதாப்பேட்டை, தாம்பரத்திலிருந்து வருவோர், வேளச்சேரி, மயிலாப்பூர், சென்னை கடற்கரை வரை செல்வது எளிதாகும்.
வேளச்சேரி மற்றும் பரங்கிமலை இடையிலான பறக்கும் ரயில் சேவை இன்று அதிகாலை முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. தென் சென்னை மக்களின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட இந்தத் திட்டம், தற்போது முழுமையான பயன்பாட்டுக்கு வந்துள்ளதால் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
இந்த புதிய வழித்தடம் பயன்பாட்டுக்கு வந்ததன் மூலம், பரங்கிமலை ரயில் நிலையம் ஒரு மிகப்பெரிய போக்குவரத்து சங்கமமாக உருவெடுத்துள்ளது. பயணிகள் இனி ஒரே இடத்தில் பறக்கும் ரயில், தாம்பரம் மார்க்கமாகச் செல்லும் புறநகர் ரயில் மற்றும் மெட்ரோ ரயில் என மூன்றிற்கும் எளிதாக மாறிக் கொள்ள முடியும். குறிப்பாக, ஐடி நிறுவனங்கள் நிறைந்த ஓஎம்ஆர் மற்றும் வேளச்சேரி பகுதிகளில் இருந்து ஜிஎஸ்டி சாலைக்குச் செல்பவர்களுக்கு இந்த இணைப்பு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, சென்னை கடற்கரையிலிருந்து பரங்கிமலை வரை ரயில்கள் நேரடியாக இயக்கப்படுகின்றன. அதிகாலை 5 மணி முதலே இந்தச் சேவைகள் தடையின்றித் தொடங்கின. வேளச்சேரியிலிருந்து பரங்கிமலை வரையிலான சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தை வெறும் 12 நிமிடங்களில் கடக்க முடிவது, சாலைப் பயணத்தில் சிக்கித் தவிப்பவர்களுக்குப் பெரும் நிம்மதியைத் தந்துள்ளது.
சென்னை கடற்கரை - பரங்கிமலை இடையே தினமும் 86 ரயில்கள் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. கடற்கரை - வேளச்சேரி இடையே 4 ரயில்களும், பரங்கிமலை - வேளச்சேரி இடையே 6 ரயில்களும் என மொத்தம் 96 ரயில்கள் இந்தத் தடத்தில் இயக்கப்பட உள்ளன. தற்போது இந்த வழித்தடத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக ரயில்கள் மிதமான வேகத்தில் இயக்கப்படுகின்றன. அதேபோல், ஆதம்பாக்கம் ரயில் நிலையத்தில் இறுதிக்கட்டப் பணிகள் இன்னும் சில வாரங்களில் நிறைவடைய உள்ளதால், தற்போதைக்கு ரயில்கள் அங்கு நிற்காமல் நேரடியாகச் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகக் குறைந்த பயணக் கட்டணத்தில் இந்தப் புதிய சேவை தொடங்கப்பட்டிருப்பது, பொதுமக்களின் அன்றாடப் பயணச் செலவையும் நேரத்தையும் கணிசமாகக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.