அமைதி பலவீனம் அல்ல.. காந்தியின் ஆயுதம் அதுதான்.. நோபல் வென்ற வெனிசூலா தலைவர் புகழாரம்

Su.tha Arivalagan
Oct 25, 2025,12:44 PM IST

டெல்லி: 2025ம் ஆண்டு நோபல் அமைதிப் பரிசு வென்ற வெனிசூலா எதிர்க்கட்சித் தலைவரான மரிய கொரினா மச்சாடோ மகாத்மா காந்தியைப் புகழ்ந்துள்ளார்.


வெனிசுலாவில் ஜனநாயகத்தை அமைதியான முறையில் கொண்டுவரப் பாடுபடும் மரிய கொரினா மச்சாடோ, 2025 ஆம் ஆண்டுக்கான நோபல் அமைதிப் பரிசை வென்றுள்ளார். அதிபர் நிக்கோலஸ் மதுரோவுக்கு எதிராக அவர் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நடத்திய தொடர்ச்சியான போராட்டத்திற்காக நார்வே நோபல் கமிட்டி அவருக்கு இந்தப் பரிசை வழங்கியது.


மகாத்மா காந்தியின் தாக்கம்:




மச்சாடோ தனது போராட்டத்திற்கு மகாத்மா காந்தியின் சுதந்திரப் போராட்டத்தால் ஈர்க்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்த ஒரு நேர்காணலில், "அமைதி என்பது பலவீனம் அல்ல, மகாத்மா காந்தி அதை உலகிற்கு உணர்த்தினார். அமைதிக்கு சுதந்திரம் தேவை. அதற்குத் தார்மீக, ஆன்மீக மற்றும் உடல் வலிமை அவசியம். வெனிசுலா மக்கள் கண்ணியம், நீதி, ஒற்றுமை மற்றும் சுதந்திரத்துடன் வாழ வேண்டும் என்பதே அவரது விருப்பம்.


இந்தியா ஒரு சிறந்த ஜனநாயக நாடு. மற்ற நாடுகளுக்கு ஒரு முன்மாதிரி. உலகில் ஜனநாயக நாடுகளின் மத்தியில் இந்தியாவிற்கு ஒரு முக்கிய இடம் உண்டு. இது ஒரு பெரிய பொறுப்பு. பல நாடுகள் இந்தியாவைப் பார்த்து கற்றுக்கொள்கின்றன. ஜனநாயகத்தை எப்போதும் வலுப்படுத்த வேண்டும்.


மோடியைச் சந்திக்க விருப்பம்:


நான் இந்தியாவை மனதார நேசிக்கிறேன். ஒருநாள் பிரதமர் மோடியைச் சந்தித்து, சுதந்திர வெனிசுலாவில் அவரை வரவேற்று, இரு நாடுகளின் உறவுகளை வலுப்படுத்த விரும்புகிறேன். எனது மகள் சமீபத்தில் இந்தியாவுக்குச் சென்றார். அவருக்கு இந்தியா மிகவும் பிடித்ததுள்ளது என்றார் மச்சாடோ.


மச்சாடோ, தனிப்பட்ட ஆபத்துகளுக்கு மத்தியிலும் தொடர்ந்து ஜனநாயக சீர்திருத்தங்களுக்காகப் போராடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.