அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில்.. தீர்ப்பு.. ஞானசேகரன் குற்றவாளி.. ஜூன் 2ல் தண்டனை அறிவிப்பு
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் அனைத்து வாதங்களும் நிறைவடைந்த நிலையில், ஐந்தே மாதத்தில் இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட ஞானசேகரன் குற்றவாளி என்று மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஜூன் 2ம் தேதி தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என்று மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதி இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவி புகார் அளித்தார்.அதே சமயத்தில் இதில் சம்பந்தப்பட்ட நபரை கைது உடனடியாக செய்து தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சியை சார்ந்த தலைவர்களும் வலியுறுத்தி வந்தனர்.
மேலும், இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், அடையாறு பகுதியில் சாலையோர உணவகத்தை நடத்தி வரும் ஞானசேகரன்(37) என்ற நபரைக் கைது செய்தனர். அவரிடம் இருந்த செல்போனும் பறிக்கப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்று வந்த நிலையில், கடந்த டிசம்பர் 26ஆம் தேதி ஞானசேகரன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.
மேலும் மாணவியின் பெயர், விவரங்கள் அடங்கிய எஃப்.ஐ.ஆர் காப்பி சோசியல் மீடியாக்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நடந்து இருக்கலாம் என விளக்கம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் இந்த வழக்கிற்கு சிபிஐ விசாரணை தேவையில்லை.
இதனால் பல்கலைக்கழக மாணவி வழக்கை விசாரிக்க மூன்று பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேபோல் எஃப்ஐஆர் வெளியானது தொடர்பாக சென்னை கிழக்கு சைபர் கிரைம் போலீசார் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தனர். இந்த இரு வழக்கையும் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை மேற்கொண்டது. அதன்படி, ஞானசேகரன் மீது சிறப்பு புலனாய்வு குழு குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்தது.
இதனை தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை கடந்த மார்ச் மாதம் சென்னை மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது பாதிக்கப்பட்ட மாணவி உட்பட 29 பேரிடம் பெறப்பட்ட சாட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் பாதிக்கப்பட்ட மாணவி முன்பு ஞானசேகரன் செல்போனில் பேசியதாக கூறியதால் அவருக்கு குரல் பரிசோதனையும் செய்யப்பட்டது.
இதற்கிடையே ஞானசேகருக்கு முன்னதாக கொலை, கொள்ளை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்பு இருந்ததால் அந்தந்த வழக்குகளிலும் போலீசார் தனித்தனியாக காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர். அதேபோல் மற்றொரு பெண் கொடுத்த பாலியல் புகாரின் அடிப்படையில் ஞானசேகரன் மீது சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
11 குற்றச்சாட்டுகளும் நிரூபணம்:
இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், நீதிபதி ராஜலட்சுமி இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பை இன்று காலை வழங்கினார். அப்போது ஞானசேகரன் குற்றவாளி என்று நீதிபதி அறிவித்தார். அவர் மீதான 11 குற்றச்சாட்டுக்கள் நிரூபணமாகியுள்ளதாகவும் நீதிபதி அறிவித்தார். அவருக்கு அதிகபட்ச தண்டனை அளிக்க காவல்துறை தரப்பில் கோரப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜூன் 2ம்தேதி அவருக்கான தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசுத் தரப்பு வழக்கறிஞர் மேரி ஜெயந்தி தீர்ப்பு குறித்துக் கூறுகையில், 11 குற்றச்சாட்டுக்கள் ஞானசேகரன் மீது சுமத்தப்பட்டது. அனைத்தும் நிரூபிக்கப்பட்டுள்ளது. தண்டனை விவரம் ஜூன் 2ம் தேதி வெளியிடப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குறைந்த தண்டனை தர வேண்டும் என்று ஞானேசகரன் கோரிக்கை வைத்தார். அதை நாங்கள் ஆடேசேபித்து அதிகபட்ச தண்டனை தரக் கோரியுள்ளோம். கருணை காட்டக் கூடாது என்றும் கோரிக்கை வைத்துள்ளோம் என்றார்.