சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி உறுதி.. இந்தியா கூட்டணியின் போட்டி சம்பிரதாயமாகவே இருக்கும்!
டெல்லி: குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகவே உள்ளது. காரணம், வெற்றிக்குத் தேவையான எம்.பிக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியிடம் உள்ளது. எனவே இந்தியா கூட்டணியின் போட்டி என்பது சம்பிரதாயமானதாகவே இருக்கும்.
இந்திய துணை குடியரசுத் தலைவர் பதவிக்கு ஜெகதீப் தன்கருக்குப் பதிலாக புதியவரைத் தேர்ந்தெடுப்பதற்கான போட்டி தொடங்கியுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி தனது வேட்பாளராக மகாராஷ்டிர ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை அறிவித்துள்ளது. இந்தியா கூட்டணியும் வேட்பாளரை நிறுத்தவுள்ளது. இன்று வேட்பாளர் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி என்பது ஏற்கனவே உறுதியாகி விட்டது. ஏனெனில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிடம் (NDA) வெற்றிக்குத் தேவையான வாக்குகளை விட, சுமார் மூன்று டஜன் வாக்குகள் அதிகமாகவே உள்ளன. எனவே, அந்தக் கூட்டணியின் வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் எளிதாக வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது.
மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டிலும் சேர்த்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் உறுப்பினர்கள் உட்பட மொத்தம் 422 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு உள்ளது. ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர் ஜெகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி போன்ற கூட்டணியில் இல்லாத கட்சிகளின் ஆதரவையும் அவர்களால் பெற முடியும். வெற்றி பெற 394 வாக்குகள் மட்டுமே தேவை.
மறுபக்கம் இந்தியா கூட்டணியின் வேட்பாளர் யார் என்பது பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக எம்.பி. திருச்சி சிவா, முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானியும், சந்திரயான் 1 திட்ட இயக்குநருமான மயில்சாமி அண்ணாதுரை ஆகியோரின் பெயர்களும் பரிசீலனையில் உள்ளன.
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு குறைவுதான் என்ற போதிலும் தங்களது ஒற்றுமையை இந்தியா முழுமைக்கும் பறைசாற்ற இந்த தேர்தலை இந்தியா கூட்டணி பயன்படுத்த விரும்புகிறது. இந்த ஆண்டு இறுதியில் பீகாரிலும், 2026-ஆம் ஆண்டில் தமிழகம், மேற்கு வங்கம், கேரளா, அசாம் ஆகிய மாநிலங்களிலும் நடைபெறவிருக்கும் முக்கிய தேர்தல்களுக்கு முன்னதாக, ஜனநாயகக் கொள்கைகளை நிலைநிறுத்தவும், தங்களுக்குள் ஒற்றுமையை வெளிப்படுத்தவும் இந்தத் தேர்தலை பயன்படுத்த முனைகின்றன எதிர்க்கட்சிகள்.
மேலும், பாஜக மிகத் தீவிரமாக குறி வைத்திருக்கும், எதிர்க்கட்சிகள் மிக மிக வலுவுாக உள்ள ஒரே மாநிலமான தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு அரசியல் தலைவரை வேட்பாளராக தேஜகூ அறிவித்திருப்பதால் அதற்குப் பதில் கொடுத்தாக வேண்டிய நிலையில் இந்தியா கூட்டணி உள்ளது. எனவே தான் ஒரு தமிழ் முகத்தை இந்தியா கூட்டணியும் நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.