குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்: இந்தியா கூட்டணி வேட்பாளராக சுதர்சன் ரெட்டி தேர்வு!

Su.tha Arivalagan
Aug 19, 2025,02:11 PM IST

டெல்லி :  குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் ஓய்வுபெற்ற நீதிபதி சுதர்சன் ரெட்டி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே டில்லியில் வெளியிட்டுள்ளார்.


குடியரசுத் துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் உடல்நிலையை காரணம் காட்டி, சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து துணை ஜனாதிபதி தேர்தலை நடத்த தேர்தல் கமிஷன் ஏற்பாடுகளை செய்து வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும், மகாராஷ்டிரா மாநில கவர்னருமான சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் தரப்பில் துணை ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்யும் ஆலோசனைகள் சமீபத்தில் இந்தியா கூட்டணி தலைவர்களால் நடத்தப்பட்டது.




பாஜக கூட்டணி சார்பில் தமிழ்நாட்டுக்காரர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதால், பாஜக.,விற்கு நெருக்கடி கொடுக்க மற்றொரு தமிழ்நாட்டுக்காரரை காங்கிரஸ் தலைமை துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் மயில்சாமி அண்ணாதுரை, திருச்சி சிவா, ப.சிதம்பரம் உள்ளிட்ட பலரின் பெயர்கள் மீடியாக்களில் பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று துணை ஜனாதிபதி வேட்பாளர் குறித்த அறிவிப்பை மல்லிகார்ஜூன கார்கே வெளியிட்டுள்ளார்.


ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 79 வயதாகும் பி.சுதர்சன ரெட்டி துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் 2007 ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவர். முதல் கோவா லோக்ஆயுக்தா தலைவராக பொறுப்பு வகித்த இவர் தனிப்பட்ட காரணங்களுக்காக 2013ம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்தவர்.