விடிவெள்ளி (சிறுகதை )
- மலர்விழி ராஜா
அதிகாலை நேரம் அது.
அலாரம் அழைக்க வில்லை. ஆனாலும் சட்டென யாரோ எழுப்பியது போல் ஒரு உணர்வு.
உறக்கம் கலைந்து எழுந்தாள் கயல். வாசல் கதவை திறந்து வெளியே வந்தவள் கீழ்வானத்தை பார்த்தாள்.
அங்கே அழகான விடிவெள்ளி அவளை பார்த்து கண் சிமிட்டுவது போல் ஜொலித்தது. சற்று நேரம் தன்னை மறந்து அதையே பார்த்தபடி நின்றிருந்தாள்.
இது அவளுக்கு ஒரு வழக்கமான மகிழ்ச்சி. உண்மையைச் சொல்வதானால், அவளுக்கு கிடைக்கும் சிறு சந்தோசமே இதுதான். தினசரி வாடிக்கையும் கூட.
ஆயிரம் கனவுகளுடன் திருமண பந்தத்தில் அடியெடுத்து வைத்தவள் கயல். ஆனால் திருமணமாகி வந்தது முதலே தினம் தினம் ஏதேனும் பிரச்னைகள் தொடர்ந்தது.
கணவனின் அன்பிற்காக ஏங்கினாள். ஒரு நிமிடம் முகம் பார்த்து அன்பாக பேசமாட்டாரா, ஆசையாக கொஞ்ச மாட்டாரா என
என ஒவ்வொரு நாளும் ஏங்கினாள். ஆனால் நாட்கள் நகர்ந்ததுதான் மிச்சம்.
திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது.
அன்பான கணவன்தான்.. அதில் சந்தேகமே இல்லை. அந்த அன்புக்கு கிடைத்த பரிசாக ஒரு வயதில் மகள் மீனா. கயல் தனது கணவன் மீது அவ்வளவு அன்பு வைத்திருந்தாள்.
அவனுக்கும் அவள் மீது அன்பு இருந்தாலும் அவளை கண்டு கொள்வதில்லை. அதாவது எதையும் வெளிக்காட்டுவதில்லை. அது ஏனோ ஒரு வகையான அலட்சியம். திருமணமாகி விட்டது குழந்தை பிறந்தாயிற்று. நாம் உண்டு நம் வேலை உண்டுயென்று இருந்தான். மனைவியை பெயர் சொல்லிக் கூட கூப்பிட மாட்டான்.
மாறாக, தனது அம்மா அப்பா இருவரிடமும் அளவுகடந்த பாசத்தைக் கொட்டினான். தனது மனைவி யாரை நம்பி வந்தாள் என்பதை மறந்து போனான். அவளை விட்டு விட்டு, பெற்றவர்களிடமே பாசத்தோடு இழையோடிக் கொண்டிருந்தான்.
கயலுக்கோ, வாழ்க்கை மிகவும் கடினமாக தோன்றியது. எத்தனை உறவுகள் இருந்தும் என்ன? கணவனின் அன்புக்கு ஈடுஇணை
ஏது?.... அந்த அன்பும், அக்கறையும், பாசமும்தானே ஒரு மனைவிக்கு தேவையானது. அது உரிமையும் கூட, அல்லவா!
பெற்ற மகளைக் கொஞ்சி மகிழ்வது மட்டுமே அவள் வாழ்க்கையில் மிகப்.... பெரிய மகிழ்ச்சியாக மாறிப் போயிருந்தது. மகளோடு மட்டுமே அவளது பெரும்பாலான பொழுதுகள் கரைந்தன.
"கயல்"
திடீரென கேட்ட ...... கணவனின் குரல்.......!!
ஒரு நிமிடம் அவளுக்கு தூக்கி வாரிப்போட்டது.. கூடவே நம்ப முடியாத ஆச்சர்யமும்...!
"அத்தான்... என்னையா கூப்பிட்டிங்க.....?"
"ஆமா... உன்னைத்தான்"
அவளது வறண்ட விழிகள் ஈரமாகின, குளம் போல மாறி குபுக்கென்று கொட்டி விடும் அளவுக்கு துளிகள் திரண்டன.
எத்தனை நாட்கள் இந்த குரலுக்காக காத்திருந்தாள், இப்படி ஒரு அழைப்புக்காக ஏங்கிப் போயிருந்தாள்.. !
கணவனின் குரலில் அழைப்பில் மட்டுமல்ல.. அவள் வாழ்க்கையிலும் கூட ஒரு மாற்றம் வந்ததாக தோன்றியது..
மீண்டும் விடிவெள்ளி வந்தது போல் ஆனந்தமாக உள்ளே ஓடினாள் கயல்
கயலின் மனதில் வீசிக் கொண்டிருந்த புயல் அடங்கி இனி தென்றல் அங்கே வீசக் கூடும்