உங்க கனவை RCB நிறைவேத்திருச்சு.. SBI கனவை நீங்க நிறைவேத்துங்க.. மல்லையாவுக்கு நூதன கோரிக்கை!
லண்டன்: வங்கி மோசடியில் சிக்கி இந்தியாவை விட்டுத் தப்பி ஓடி, லண்டனில் வசித்து வரும் தொழிலதிபர் விஜய் மல்லையா, தான் நிறுவிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றதற்கு பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.
ஆர்சிபி அணிக்கு பாராட்டு தெரிவித்துள்ள விஜய் மல்லையாவுக்கு கிரிக்கெட் ரசிகை ஒருவர் நூதனமான கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.
18வது ஐபிஎல் கோப்பையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வென்றுள்ளது. நேற்று இரவு நடந்த இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை ஜஸ்ட் 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தனது முதல் கோப்பையை கையில் ஏந்திப் பிடித்துள்ளது. பஞ்சாப் அணி சிறப்பாக சேஸிங் செய்த போதிலும் கூட கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அதிர்ச்சிகரமாக ஒரு ரன்னில் அவுட்டானதால் அந்த அணிக்குப் பெரும் பின்னடைவாகி விட்டது. ஒரு வேளை ஐயர் அவுட்டாகாமல் 50 ரன்களைச் சேர்த்திருந்தால் நிச்சயம் கோப்பை பஞ்சாபுக்குத்தான் போயிருக்கும்.
இந்த நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் நிறுவனரான தொழிலதிபர் விஜய் மல்லையா அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார், மலரும் நினைவுகளையும் அவர் பகிர்ந்துள்ளார். தற்போது லண்டனில் உள்ள மல்லையா இதுகுறித்து எக்ஸ் தளத்தில் போட்டுள்ள பதிவு:
நான் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியை நிறுவியபோது, ஐபிஎல் கோப்பை பெங்களூருவுக்கு வர வேண்டும் என்பதே எனது கனவாக இருந்தது. அப்போதைய இளம் வீரரான புகழ்பெற்ற கிங் கோலியை தேர்வு செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர் 18 ஆண்டுகளாக RCB அணியிலேயே நீடித்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோல யுனிவர்ஸ் பாஸ் கிறிஸ் கெய்ல் மற்றும் மிஸ்டர் 360 ஏபி டிவில்லியர்ஸ் ஆகியோரையும் தேர்வு செய்யும் பெருமை எனக்குக் கிடைத்தது. அவர்கள் RCB வரலாற்றில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளனர். இறுதியாக, ஐபிஎல் கோப்பை பெங்களூருவுக்கு வந்துவிட்டது!
என் கனவை நிஜமாக்கிய அனைவருக்கும் வாழ்த்துகளும் நன்றிகளும்! RCB ரசிகர்கள் மிகவும் சிறந்தவர்கள், இந்த ஐபிஎல் கோப்பை அவர்களுக்குத் தகுதியானது. ஈ சாலா கப் பெங்களூரு வருதே என்று கூறியுள்ளார் விஜய் மல்லையா.
ரசிகை குஷ்புவின் குசும்பு
அவரது இந்த எக்ஸ் பதிவுக்கு குஷ்பு என்ற ரசிகை போட்டுள்ள பதிலில், ஆர்சிபி உங்க கனவை நிறைவேத்திருச்சு.. நீங்க எஸ்பிஐ (பாரத ஸ்டேட் வங்கி) கனவை நிறைவேத்துங்க, கிளம்பி இந்தியாவுக்கு வாங்கு என்று குசும்பாக கூறியுள்ளார்.
ஸ்டேட் வங்கியில்தான் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி விட்டு அதைத் தராமல் ஏமாற்றி விட்டு நாட்டை விட்டு வெளியேறினார் விஜய் மல்லையா என்பது வழக்கு. இதுதொடர்பான வழக்கும் நிலுவையில் இருக்கிறது. அவர் நாட்டை விட்டு வெளியேறிய நிலையில் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தி வர முயற்சிகளும் தொடர்ந்தபடிதான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.