நெல்லை, தூத்துக்குடியில் விஜய் ரோடுஷோ... தொண்டர்களால் தொடரும் விபத்துக்களால் பரபரப்பு
தூத்துக்குடி: தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று (ஏப்ரல் 08, 2026) தென் மாவட்டங்களில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுக்கிறார். நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று நடைபெறும் பிரம்மாண்டமான ரோடு ஷோ மற்றும் பிரச்சாரக் கூட்டங்களுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
நெல்லை மாவட்டத்தைப் பொறுத்த வரை, பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருநெல்வேலி - தூத்துக்குடி புறவழிச்சாலையில் இன்று மதியம் 1:00 மணி அளவில் விஜய் தனது பிரச்சாரத்தைத் தொடங்குகிறார்.
இதற்கான உரிய அனுமதியை காவல்துறை மற்றும் தேர்தல் ஆணையத்திடம் இருந்து தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் பெற்றுள்ளார். இந்தப் புறவழிச்சாலை பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு, விஜய் பின்வரும் முக்கிய இடங்கள் வழியாகத் தனது பயணத்தைத் தொடர்கிறார்:
தாழையூத்து
தச்சநல்லூர்
வண்ணார்பேட்டை
மார்க்கெட்
K.T.C நகர்
இந்த வழித்தடங்கள் வழியாகத் தொண்டர்களைச் சந்தித்தபடி, அவர் தூத்துக்குடி மாவட்டத்திற்குள் நுழைகிறார்.
தொண்டர்களால் தொடரும் விபத்துக்கள் :
விஜய் பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்கள் அனைத்திலும் அவரது ரசிகர்களும், கட்சி தொண்டர்களும் ஆர்வ மிகுதியால் விஜய்யின் வாகனத்தை, இரு சக்கர வாகனங்களில் பின் தொடர்ந்து செல்லும் நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
அப்படி அவர்கள் பின் தொடரும் போது விபத்து ஏற்பட்டு, காயமடையும் சம்பவங்களும் நடந்து வருகிறது. இன்று நெல்லையில் ரோடுஷோ நடத்த விஜய் சென்ற போது கட்சி தொண்டர்கள் பலரும் பைக்குகளில் விஜய்யை பின் தொடர்ந்து சென்றனர். அப்போது ஒருவரின் பைக் நிலை தடுமாறி கீழே விழுந்தது.
அவருக்கு பின்னால் வந்த பைக்குகளும் அடுத்தடுத்து மோதி விபத்திற்குள்ளாகின. இருந்தும் விஜய் தனது வாகனத்தை நிறுத்தாமல் சென்றார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் மாலை 3 மணிக்கு ரோடு ஷோ :
நெல்லைப் பயணத்தை முடித்துக் கொண்டு தூத்துக்குடி நகருக்கு வரும் விஜய்க்குப் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கத் தவெக நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர். தூத்துக்குடி நகர உட்கோட்டம், மைல் பகுதியில் இருந்து VVD சிக்னல் வரை சாலை நிகழ்ச்சியை நடத்தத் தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
மாலை 3:00 மணி முதல் இந்தப் பிரச்சார பயணம் தூத்துக்குடியில் தொடங்குகிறது. மக்கள் நெருக்கம் மிகுந்த இந்தப் பகுதிகளில் திறந்த வாகனத்தில் சென்று விஜய் வாக்கு சேகரிக்க உள்ளார்.விஜய்யின் வருகையை முன்னிட்டு அந்தந்த மாவட்டக் காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்தில் எவ்வித இடையூறும் ஏற்படாத வண்ணம் மாற்றுப் பாதைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.