விஜய்க்கு பாதுகாப்பு இல்லை...அமித்ஷாவுக்கு புகார் மனு அனுப்பிய தவெக
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் நடிகர் விஜய்க்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு அக்கட்சி சார்பில் அதிகாரப்பூர்வமாக புகார் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து தவெக புகார் :
தமிழக வெற்றிக் கழகத்தின் இணைப் பொதுச்செயலாளர் நிர்மல்குமார், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எழுதியுள்ள அந்த கடிதத்தில், விஜய்யின் பாதுகாப்பு குறித்து தீவிர கவலையை வெளிப்படுத்தியுள்ளார். அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விவரங்கள்: நடிகர் விஜய் தற்போது 'Y' பிரிவு பாதுகாப்புப் பட்டியலில் உள்ளார். இந்த அந்தஸ்தைப் பெற்றுள்ள ஒருவருக்கு வழங்கப்பட வேண்டிய உரிய பாதுகாப்பு விதிமுறைகள் தமிழகத்தில் முறையாகக் கடைபிடிக்கப்படுவதில்லை.
விஜய் பங்கேற்கும் பொதுக்கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் மக்கள் வெள்ளம் அலைமோதுகிறது. அத்தகைய தருணங்களில் அவருக்கு வழங்கப்பட வேண்டிய பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்வதில்லை.தமிழகத்தில் விஜய்க்கு உரிய பாதுகாப்பை வழங்குமாறு மாநில அரசுக்கு மத்திய அரசு உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என நிர்மல்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
தேர்தல் அதிகாரியிடமும் புகார் :
முன்னதாக இன்று காலை தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை சந்தித்த, தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனாவும் விஜய்யின் பிரச்சாரத்திற்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என நேரில் சென்று புகார் மனு அளித்து விட்டு வந்தார். விஜய்யின் பிரச்சாரத்தில் சதி நடப்பதாக ஏற்கனவே ஆதவ் அர்ஜூனா குற்றம்சாட்டி இருந்தார். இந்த நிலையில் இன்று முறையாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியிலும் அனுமதி மறுப்பு :
தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் விஜய்க்கு பிரச்சாரம் செய்ய 4 இடங்கள் தவிர, 19 இடங்களில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் விஜய் வீட்டில் இருந்தே டிஜிட்டல் முறையில் புதுச்சேரி மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்ய உள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழகத்தில் தனித்து போட்டியிடும் தவெக, புதுச்சேரியில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது.
அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?
மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இருந்து இதற்கான பதில் அல்லது மாநில அரசுக்கு இது தொடர்பான அறிவுறுத்தல்கள் எப்போது வரும் என்பதை அரசியல் விமர்சகர்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர். குறிப்பாக, மாநில அரசுக்கும் தவெக-விற்கும் இடையிலான அரசியல் மோதல் அதிகரித்து வரும் வேளையில், இந்தப் பாதுகாப்பு விவகாரம் ஒரு முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது.