Vinayakar Chathurthi 2025: விநாயகர் சதுர்த்தி ஏன் கொண்டாடப்படுகிறது.. அதன் சிறப்புகள் என்ன?
Aug 21, 2025,10:45 AM IST
- ஸ்வர்ணலட்சுமி
விநாயகர் சதுர்த்தியின் சிறப்புகள்: விசுவா வசு வருடம் 20 25 ஆகஸ்ட் 27ஆம் தேதி புதன்கிழமை விநாயகர் சதுர்த்தி முழுமுதற் கடவுளான விநாயகர் பெருமானின் பிறந்த நாளை கொண்டாடும் ஒரு முக்கியமான பண்டிகையாகும்.இது ஆவணி மாதத்தில் வளர்பிறை சதுர்த்தி திதியில் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் விநாயகப் பெருமானின் சிலை வைத்து பூஜித்து வழிபடுவது வழக்கம் மக்கள் தங்கள் வீடுகளிலும் ,பொது இடங்களிலும் ஒவ்வொரு வீதிகளிலும் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடுகள் செய்வார்கள்
.
சதுர்த்தி என்பது அமாவாசை நாளுக்கும் , பௌர்ணமி நாளுக்கும் அடுத்து வரும் நான்காவது திதி சதுர்த்தி திதி ஆகும். "சதுர் "என்னும் வடமொழிச் சொல்லுக்கு நான்கு என பொருள்படும் .15 நாட்களைக் கொண்ட தொகுதியில் நான்காவது நாளாக வருவதனால் இந்த நாள் "சதுர்த்தி "என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தி உலக மக்கள் அனைவராலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதற்கு என்ன ?காரணம் என்பதற்கு ஒரு சிறிய புராணக் கதை உள்ளது. பார்வதி தேவி தன் உடம்பில் இருந்த அழுக்கில் இருந்து விநாயகரை உருவாக்கினார். சிவபெருமான் அவருக்கு உயிர் கொடுத்ததாக புராணங்கள் கூறுகின்றன. விநாயகப் பெருமான் அவதரித்த தினமே விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது. அதற்கு முக்கிய காரணம் விநாயகர் தடைகளை நீக்கும் கடவுளாக கருதப்படுகிறார். அவர் ஞானம் ,அறிவு செல்வம் மற்றும் கல்வி ஆகியவற்றின் கடவுளாகவும் கருதப்படுகிறார்.
விநாயகரை வழிபடுவதனால் வாழ்க்கையில் உள்ள தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும் என்று நம்பப்படுகிறது .விநாயகர் சதுர்த்தி புதிய தொடக்கங்களை குறிக்கும் ஒரு பண்டிகையாக கருதப்படுகிறது. இந்த நாளில் புதிய செயல்களை தொடங்குவது சிறப்பானதும் மங்களகரமானதும் ஆகும்.
வட இந்தியா ,தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களில் விநாயகர் சதுர்த்தி வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
நாம் எந்த ஒரு செயலை துவக்குவதாக இருந்தாலும் 'பிள்ளையார் சுழி 'போட்டு அந்தச் செயலை துவங்கும் முன்பு விநாயகரை வழிபட்டு தொடங்குவது வழக்கம். விநாயகப் பெருமானின் அருளால் நாம் செய்யும் காரியத்தில் வெற்றி ,லாபம் கிட்டும் என்பது நம்பிக்கை. வரும் விநாயகர் சதுர்த்தி நாளில் விநாயகரை மனதார வழிபாடு செய்து வாழ்க்கையில் புதிய துவக்கம் ,வளர்ச்சி மற்றும் நம் வாழ்வில் இருக்கும் துன்பங்கள் ,பிரச்சனைகள் சவால்கள் ,சிக்கல்கள் ஆகியவற்றில் இருந்து விடுபட முடியும் என்பது நம் அனைவரின் நம்பிக்கை.