Vipuvana sangadahara chaturthi: விபுவன சங்கடஹர சதுர்த்தி.. விரதம் இருந்து விநாயகனை வழிபடுவோம்

Su.tha Arivalagan
Jun 04, 2026,10:16 AM IST

- ஸ்வர்ணலட்சுமி


பராபவ வருடம் 20 26 ஜூன் மாதம் நான்காம் தேதி வியாழக்கிழமை, வைகாசி மாதம் 21ஆம் தேதி சங்கடஹர சதுர்த்தி அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த ஆண்டு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் "அதிக மாத விபுவன சங்கடஹர சதுர்த்தி"யாக இந்த நன்னாள் அமைந்துள்ளது. எனவே இந்த சங்கடஹர சதுர்த்தி நாள் விரதம் இருந்து விநாயகப் பெருமானை வழிபடுவது மிகவும் விசேஷமான பலன்களைத் தரும்.


 சில குறிப்பிட்ட மாதங்களில் வரும் சங்கட ஹர  சதுர்த்தியின் சிறப்பு மிகவும் விசேஷமாகும். மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் அதிக மாத சங்கடஹர சதுர்த்தி வரும். இன்று அமைந்துள்ள இந்த சிறப்புமிக்க விபுவன சங்கடஹர சதுர்த்தியை தவறவிடாதீர்கள். இந்த நாள் முழுமுதற் கடவுளான விநாயகரை வழிபடுவதால் நம் அனைத்து துன்பங்களில் இருந்தும் விடுபட முடியும்.


வழிபாடு:

 



சங்கடஹர சதுர்த்தி- பொருள்: 'சங்கடஹர' என்றால் துன்பங்களை அதாவது சங்கடங்களை அழிப்பவர் விநாயகப் பெருமான்.


ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு அடுத்து வரும் தேய்பிறை சதுர்த்தி திதியன்று கணபதியை தொழுவதனால்  கஷ்டங்கள் நிவர்த்தி ஆகும்.


இன்று மாலை சந்தியா கால( சூரியன் மறையும் நேரம்) நேரத்தில் அருகில் உள்ள விநாயகர் கோவிலுக்குச் சென்று விநாயகருக்கு பிடித்தமான அருகம் புல் மாலை சாற்றி, கொழுக்கட்டை அல்லது சுண்டல் நைவேத்தியம் படையல் வைத்து வழிபடுவது சிறப்பு.


விரதம்:


சங்கடஹர சதுர்த்தி அன்று நாள் முழுவதும் உபவாசம் இருப்பது வழக்கம். உடல்நிலை சரியில்லாத, மருந்து மாத்திரைகள் உட் கொள்பவர்கள் பால், பழம் போன்றவற்றை உட்கொண்டு விநாயகரை மனதார நினைத்து, விநாயகர் மந்திரங்களை மனதில் ஜெபித்து கொண்டே இருப்பது சிறப்பு . அல்லது எளிமையான உணவுகள் உட்கொண்டு வழிபடுவது சிறப்பு.


எப்படிப்பட்ட கஷ்டமாக இருந்தாலும் விலகி ஓடிவிடும். நவக்கிரகங்களால் ஏற்படும் தொல்லைகள் குறிப்பாக சனி பகவானால் ஏற்படும் தொந்தரவுகளில் இருந்து விடுபட்டு நல்ல பலன்களை பெற இயலும் என்பது நம்பிக்கை. சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகருக்கு அருகம்புல் சாற்றுவது, பிறவிப் பிணை நீங்கி இன்பம் பெருகும். சதுர்த்தியில் விரதம் இருந்தால் கணபதியின் அருள் கட்டாயம் கிட்டும்.


சக்தி மிக்க மகா கணபதி மந்திரம்:


'ஓம் ஸ்ரீம்   ஹ்ரீம்  க்லாம்  கலெளம்  கம்  தோரண கணபதயே சர்வகார்ய    கர்த்தாய   ஸகல சித்திகராய ஸர்வஜன  வசீகரணாயருணா மோசன வல்லபாய  ஹரீம் கம்  கணபதயே ஸ்வாஹா'.


கணேச காயத்ரி மந்திரம் :

 

"ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ர துண்டாய தீமஹி தன்னோ தந்தி:  ப்ரச்சோதயாத் ".


இந்த மந்திரங்களை சங்கடஹர சதுர்த்தி நாளில் படிக்க மனதையும், புத்தியையும் தெளிவாக்கும். வீட்டில் நல்ல நேர்மறை அதிர்வுகள் ஏற்படும். மேலும் ஔவையார் அருளிய 'விநாயகர் அகவல்' படிப்பது சிறப்பானது .


விபுவன சங்கடஹர சதுர்த்தி யான இன்று  விநாயகப் பெருமான்  அனைவருக்கும் அனைத்து வளங்களும் நலங்களும் அருள்வாராக. மேலும் இது போன்ற  சுவாரஸ்யமான  ஆன்மீக தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன்.எழுதியவர் உங்கள்  ஸ்வர்ணலக்ஷ்மி  பாலசுப்ரமணி.