விராட் கோலியின் காலில் விழுந்த ரசிகர்.. மனுஷன் அப்படியே நெகிழ்ந்து போயிட்டாரு பாருங்க!
- சரளா ராம்பாபு
மும்பை: தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக நேற்று நடந்த முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி அட்டகாசமான சதம் அடித்தார். அப்போது மைதானத்திற்குள் ஊடுறுவி ஓடி வந்த ரசிகர் ஒருவர், விராட் கோலி காலில் விழுந்து வணங்கியது சலசலப்பையும், பரபரப்பையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
நேற்றைய போட்டியில் முதலில் இந்தியா பேட் செய்தது அப்போது 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு இந்தியா 349 ரன்களைக் குவித்தது. இதில் கோலி குவித்த 135 ரன்கள் முக்கியமானது. வெறும் 120 பந்துகளில் இதை சாதித்தார் கோலி. அவர் அடித்த 52வது ஒரு நாள் சதம் இது என்பதும் ஸ்பெஷலானது.
பின்னர் விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி 49.2 ஓவரில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 332 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. ஆட்டநாயனாக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டார்.
விராட் கோலி ஆடிக் கொண்டிருந்தபோது ஒரு பரபரப்பு ஏற்பட்டது. அவர் சதம் போட்டதும் ரசிகர் ஒருவர் வேகமாக உள்ளே ஊடுறுவி ஓடி வந்தார். விராட் கோலியை நோக்கி ஓடிய அவர் வேகமாக போய் அவரது காலில் விழுந்தார். இதைப் பார்த்து விராட் கோலியும், அதிர்ச்சியும் நெகிழ்ச்சியும் அடைந்து அவரை எழுந்திருக்குமாறு கூறினார். பின்னர் பாதுகாவலர்களும் ஓடி வந்து அந்த ரசிகரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
அந்த ரசிகர் படு வேகமாக ஓடி வந்ததைப் பார்த்து பலரும் அடடே பயங்கரமான அத்லெட்டாக இருப்பார் போலயே என்று கமெண்ட் அடிக்கும் அளவுக்கு அவரது ஓட்டம் இருந்தது. விராட் கோலியும் கூட ரசிகரின் செயலைப் பார்த்து முதலில் அதிர்ச்சி அடைந்தாலும் பின்னர் புன்னகை முகத்தை வெளிப்படுத்தினார்.
விராட் கோலி தற்போது டெஸ்ட், டி20 போட்டிகளில் ஓய்வை அறிவித்து விட்டார். ஒரு நாள் போட்டிகளில் மட்டும் தொடர்ந்து ஆடுவேன என்று கூறியுள்ளார். அதில் தான் இப்போதும் கிங் என்பதை நேற்றைய சதம் மூலம் உறுதிப்படுத்தியும் விட்டார். இதனால் கோலி ரசிகர்கள் செம ஹேப்பியாக உள்ளனர்.