கடையே கலகலவென சிரித்தது .. விஷாலின் விளையாட்டுக்கள் (16)
- பா. பானுமதி
எங்கள் வீட்டை சுற்றி நிறைய கார்மெண்ட்ஸ் உண்டு. விஷால் சிறு குழந்தையாக இருக்கும்போது அந்த கார்மெண்ட்ஸ்ல் விஷாலை அழைத்துச் சென்று தேவையான சட்டையை வாங்கிக் கொள்வேன். அங்கே போட்டு பார்க்கலாம் சிறு குழந்தை தானே.
விஷால் சற்று வளர்ந்த பின்பு அங்கு தைக்கும் சட்டைகள் அவனுக்கு போட முடியாது என்று தீபாவளிக்கு சட்டை வாங்க கடைக்குச் சென்றோம் .
விஷாலுக்கு பிடித்த நிறங்களில் ஒன்று பச்சை எந்த வண்ண சட்டை வேண்டும் என்று கேட்டதற்கு பச்சை என்று கூறினான் .
அதன்படியே கடைக்குச் சென்று பச்சை சட்டைகள் தேடிப்பார்க்க விற்பனை பையனும் நான் கேட்ட சட்டைகளை எடுத்து போட்டுக் கொண்டிருந்தான்.
அருகில் உள்ள ரேக்கில் இருக்கும் இளம் பச்சை கரும் பச்சை சட்டைகளை எடுத்து போடுமாறு நான் சொல்லிக் கொண்டிருக்க அதன்படியே அந்த பையனும் எடுத்துக் கொண்டிருக்க, நாங்கள் இருவரும் மும்முரமாக சட்டை தேர்ந்து எடுப்பதில் இருந்தோம்.
அப்போது பக்கத்திலிருந்து விற்பனை பையன் சிரித்துக் கொண்டிருந்தான். அடுத்தடுத்து அனைத்து விற்பனை பையன்களும் சிரிக்கத் தொடங்கி விட்டனர். கடைக்கு துணி வாங்க வந்திருந்த அனைவரும் சிரித்தனர் சத்தமாக.
பச்சை சட்டை தானே கேட்டு வாங்குகிறோம். இதில் பல்லை காட்ட என்ன இருக்கு என்று சிந்தித்தபடியே நான் விஷாலை பார்க்க...
நான் கண்ட காட்சி எனக்கும் சிரிப்பு பொங்கி வந்துவிட்டது . வண்ண வண்ண வகை வகையான சட்டைகள் பல பல மாடல்களாக தொங்க விடப்பட்டு இருந்தது. பொம்மைகளுக்கும் அழகாக சட்டை போடப்பட்டிருந்தது
புது சட்டை தானே வாங்க வந்திருக்கிறோம் போட்டு பார்க்க வேண்டுமே என்று.. விஷாலும் தான் போட்டு இருந்த சட்டை டவுசர் கழட்டி விட்டு அப்படியே போஸ் கொடுத்து கொண்டிருந்தான் அதைப் பார்த்து தான் அனைவரும் சிரித்தனர் .
ஒரு புது சட்டை போட்டு பார்த்து அந்த அளவை எடுக்கும்படி நான் கூறிக் கொண்டிருந்தேன்.... மறுபடியும் போட்ட புது சட்டை கழட்டிவிட்டான். அடுத்த சட்டை போட்டு பார்க்க....
அந்தப் பிள்ளை குணம் வெள்ளை மனம் பேரின்பம் தானே
விஷால் விளையாட்டு தொடரும்
(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)