உடம்புல நல்ல ரத்தம் ஓடுதா... இல்லையெனில் வாங்க இந்த கோயிலுக்கு!
- கவிநிலவு சுமதி சிவக்குமார்
ஆம் சுத்த ரத்தினேஸ்வரர் கோவிலுக்கு வாங்க... இந்தக் கோயில் பெரம்பலூரில் இருந்து திருச்சி செல்லும் பைபாஸ் சாலையில் இடது புறமாக பாடாலூர் என்ற ஊரில் இருந்து சாலை பிரிகிறது. அந்த தார்சாலையில் ஐந்து கிலோ மீட்டர் உள்ளே செல்லும் போது ஊட்டத்தூர் என்ற ஊரில் சுத்த ரத்தினேஸ்வரர் என்ற கோவில் உள்ளது.
இது சோழர் காலத்தில் ராஜராஜ சோழன் அவர்களால் கட்டப்பட்டது.
இங்கே கர்ப்பக் கிரகத்தில் மூலவர் ( சுயம்பு லிங்கம் ) ரத்தம் வழிந்தபடி காட்சியளிக்கிறார். இடதுபுறமாக நடராஜர் நடனக் கோலத்தில் காட்சி தருகிறார். அவரது இடதுப் பக்கத்தில் அகிலாண்டேஸ்வரி அம்பாள் நடராஜரை ஓரக் கண்ணால் நோக்கியபடி தலை சாய்த்து அருள் பாலிக்கிறார்.
சாமிக்கு நேரெதிராக தீர்த்தம் ( சூர்ய, சந்திர, அக்னி தீர்த்தங்கள் ) அமையப் பெற்றுள்ளது. இந்த தீர்த்தத்தின் நீர் இரத்தத்தை சுத்தப்படுத்தவும் சிறுநீர் மற்றும் பித்தப்பை கல் அகற்றவும் உதவுகிறது.
அர்ச்சனை செய்ய
நோயுள்ளவர்கள் அவர்கள் பிறந்த நட்சத்திரத்தில் இந்த கோவிலுக்கு வந்து அங்கு வாசலில் விற்கப்படும் கடைகளில் வெட்டி வேர் மாலை, (48 முடிச்சுகள் கொண்டது) ஒரு ஐந்து லிட்டர் காலி கேன், சாமிக்கு மாலை, வெற்றிலை, தேங்காய், கற்பூரம், பத்தி என ஒரு செட் பூஜை செய்பவர் சொல்லும்படி வாங்கி செல்ல வேண்டும்.
அவர் அந்த கேனில் தீர்த்தம் ( கம்பிகள் போட்டு மூடி சுத்திகரிக்கப்பட்ட குடிநீராக ) பிடித்து தருகிறார். பிறகு மூலவர் சன்னதிக்கு கற்பூரம் காட்டி நடராஜர் முன் வைத்து அர்ச்சித்து வெட்டி வேர் மாலை அவருக்கு அணிவித்து திருநீறு தீர்த்தத்தில் கலந்து தருகிறார்.
குடிக்கும் முறை
வாங்கி வந்த தீர்த்தத்தை 100 ml எடுத்து நம் வீட்டில் குடிநீர் 100 ml எடுத்து வெட்டி வேர் ஒரு முடிச்சு அவிழ்த்து தண்ணீரில் சுத்தப்படுத்தி இரவு 7 மணிக்கு அதில் ஊர போட்டு பூஜையறையில் வைக்க வேண்டும்.
மறுநாள் அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் பல் துலக்கி முகம் அலம்பி வெட்டிவேரை எடுத்து விட்டு தீர்த்தத்தை வடிகட்டி கிழக்கு நோக்கி அமர்ந்து குடிக்க வேண்டும். இப்படியாக 48 நாட்கள் அருந்த வேண்டும். ஆனாலும் நமது நோய்க்கான மருந்துகளையும் தொடர்ந்து எடுத்துக் கொள்ளலாம்.
கடைப்பிடிக்க வேண்டியவை
இந்த 48 நாட்களும் இறந்தவர் வீட்டிற்கும், குழந்தை பிறந்த வீட்டிற்கும், இளம்பெண் பூப்புனித வீட்டிற்கும் செல்லக் கூடாது. தம்பதிகள் இணையக் கூடாது. அசைவ உணவுகள் தவிர்க்க வேண்டும்.
எனது கணவர் திரு. சிவக்குமார் அவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பித்தப்பையில் இருந்த கற்களில் ஒன்று 3.79 cm ( பித்தப்பை 4cm தான் ) மற்றும் பலதூள் கற்கள் இருந்தன. அங்கு சென்று தீர்த்தம் குடித்து (ஆயுர்வேத மருந்தும் தொடர்ந்தார்) 39 நாட்களில் வெளி வந்தது. அவ்வளவு பெரிய கல் வெளிவரும் போது சிறிய துகள் போன்ற கற்கள் கண்டிப்பாக வெளிவரும் என்று நம்புகிறோம்.
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் எனும் கூற்றுப்படி நான் இதை உங்களுக்கு பகிர்கிறேன். நீங்களும் பகிருங்கள் யாரோ ஒருவருக்கு பயன்படட்டும். வாழ்க வையகம்...!! வாழ்க வளமுடன்...!!
படம் உதவி: https://www.facebook.com/groups/1091600027561044/posts/9215637315157234/
(சுமதி சிவக்குமார்.. B. A., M. com., (co-op mgt)., M. A ., (yoga) ., DOM., (computer)., . கள்ளக்குறிச்சி மாவட்டம் மூஙகில்துறைப்பட்டு என்ற ஊரைச் சேர்ந்தவர். தனது ஊரில் ஏரிக்கு நீர் கொண்டு வர இணையும் கைகள் என்றொரு அமைப்பை ஏற்படுத்தினார் உயர்திரு அப்துல் ரஹீம் அவர்கள். நீர் நிரம்பி இருமுறை கோடி போனது. அதனால் கோமுகி நதியை வாழ்த்தி நடந்தால் வாழீ கோமுகி என்ற கவிதையை பதிவிட்டார் சுமதி சிவக்குமார். முகநூலில் நிறைய கவிதை தளங்களில் கவிதைப் போட்டி நடுவராகவும் கவியரங்கம் தலைவராகவும் திகழ்கிறார். கிட்டத்தட்ட 3000 சான்றிதழ்கள் 50 ஷீல்டுகள் பரிசு பெற்றுள்ளார். நாட்டுப்புற பாடல் எழுதி பாடவும் செய்வார். மதியின் மதி என்ற கவிதை புத்தகம் , தெம்மாங்கு பாடலா என்ற நாட்டுப்புற பாடல்கள் புத்தகம் வெளியிட்டுள்ளார். சின்னசேலம் கண்ணதாசன் கலை இலக்கிய பேரவையின் செயலாளராக செயல்படுகிறார்)