சித்திரை திருமகளே வருக..!!
- கவிஞாயிறு இரா. கலைச்செல்வி
சித்திரை திருமகளே வருக ..!!
சீர்மிகு வாழ்வைத் தருக ..!!
சீரிய பணிகள் சிறக்க .!!
சிறப்புற ஆசிகள் தருக. .!!
சித்திரைத் திருமகளே நீ..!!
வசந்த கால வாசலிலே...
வர்ணங்களின் கோலம் நீ ..!!
பூத்துக் குலுங்கும் பூக்களின்
பூலோக அரசி நீ ..!!
சித்திரை மகள் முத்திரை பதிக்க,
தமிழ் புத்தாண்டாக ,
தவழ்ந்து வருகிறாள்..!!
பங்குனி திங்களுக்கு ,
விடை கொடுத்து...
பவளவாய் திறந்து,
மகிழ்ந்து வருகிறாள்..!!
சுடர் விடும் சூரியனும்,
மணம் வீசும் மலர்களும்,
மகிழ்வோடு உன்னை ...
வரவேற்கும் போது,
மங்கல மேளம் கொட்ட ,
நாமும் சித்திரை திருமகளை ...
சிறப்போடு வரவேற்போம்.
மகிழ்வோடு கொண்டாடுவோம்.
சித்திரை மகளே..!!
உலகின் உயிர்கள் உய்ய ,
உழவன் வாழ்வு உயர ,
உடனே மழையைத் தருக..!!
உன் நல் வரவால் ,
வேப்ப மரங்கள் பூத்து குலுங்கும்.
மாமரங்கள் காய்த்து தொங்கும்.
உன் சீர்மிகு வருகையால் ..!!
மதுரையில் சித்திரை திருவிழா,
மகிழ்வோடு நடக்குமன்றோ..!!
மதுரை மீனாட்சியின் திருக்கல்யாணம் ,
சீரும் சிறப்புமாய் நிகழுமன்றோ..!!
சித்திரையில்,
அழகர் ஆற்றில் இறங்கும் ,
அழகு நிகழ்வினை காண ...
ஆயிரம் கண்கள் போதுமோ..!!
என்றும் உன் வரவால்
மகிழ்ச்சியே பொங்கட்டும்..!!!
ஏற்றம் மிகு இத் திரு நாட்டில் ..!!!
(எழுத்தாளர் பற்றி... சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, சென்னையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரி ஆவார். கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும், வாசிப்பின் மீதும் தீராக் காதல் கொண்ட எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. சொந்தக் குரலிலேயே தனது கதைகளை அவர் வாசித்துள்ளார். கதைகள் தவிர, கவிதைகளையும் அதிகம் எழுதி வருபவர், யோகா உள்ளிட்ட பல்வேறு கலைகளையும் கற்றுத் தெளிந்தவர். உளவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். சாதனைப் பெண், தங்கத் தாரகை, கவிஞாயிறு உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.)