Wayanad: வயநாடு நிலச்சரிவிற்கு இது தான் காரணம்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

Su.tha Arivalagan
Jul 08, 2026,12:08 PM IST

வயநாடு : கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவு விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதில் பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், இந்த கோர விபத்துக்கான முக்கியக் காரணம் குறித்த அதிர வைக்கும் தகவலை வயநாடு மாவட்ட ஆட்சியர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். 


கேரளாவின் வயநாடு பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதன் காரணமாக சுரங்க பணிகள் நடைபெற்ற இடத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. வயநாடு நிலச்சரிவு விபத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், சுரங்கம் தோண்டிய மண்ணை அந்த நிறுவனம் அகற்றாமல் விட்டது தான் இந்த விபத்திற்கு காரணம். விபத்து நடந்த பகுதியில் தேங்கிக் கிடந்த ஆபத்தான மண்ணை உடனடியாக அகற்ற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்கனவே முன்னெச்சரிக்கையாக அறிவுறுத்தப்பட்டிருந்தது என்று குறிப்பிட்டார்.




இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "விபத்து நடந்த இடத்தில் இருந்த மண்ணை அகற்றுவதற்கு முன்னமே சம்பந்தப்பட்ட சுரங்க நிறுவனத்திற்கு நாங்கள் தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தோம். ஆனால், அந்த சுரங்க நிறுவனம் அந்த மண்ணை அகற்றாமல் தொடர்ந்து அலட்சியம் காட்டியுள்ளது. இந்த அடுக்கடுக்கான அலட்சியத்தின் விளைவாகவே தற்போது இந்த பெரும் நிலச்சரிவு விபத்து ஏற்பட்டுள்ளது."


சுரங்க நிறுவனத்தின் இந்த அலட்சியப் போக்குப் பக்கத்து கிராம மக்களையும், பொதுமக்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த விபத்து மற்றும் விதிமீறல்கள் குறித்து தற்பொழுது மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் இணைந்து தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். விதிமுறைகளை மீறி செயல்பட்டவர்கள் மற்றும் அலட்சியமாக இருந்த அதிகாரிகள் என அனைவர் மீதும் கடுமையான சட்டப் பூர்வ நடவடிக்கைகள் பாயும் என்று மாவட்ட நிர்வாகத் தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.


தற்போது நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் மீட்புக் குழுவினர், தீயணைப்புத் துறையினர் மற்றும் உள்ளூர் மக்கள் இணைந்து போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். சரிந்து விழுந்த மண் குவியல்களையும், இடிபாடுகளையும் அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அவசர உதவிகள் மற்றும் மருத்துவச் சிகிச்சைகள் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகின்றன.