Summer Rains.. தமிழ்நாட்டில்.. அடுத்த ஒரு வாரத்திற்கு வெயில் + மழை.. இதாங்க நிலவரம்..!
சென்னை: தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் இன்று முதல் அடுத்த ஏழு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்க கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவி வருவதால், தமிழகத்தில் கோடை காலம் தொடங்கினாலும் கூட,
கடந்த சில நாட்களாகவே ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. அதே சமயத்தில் வட தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. அதன்படி, வேலூரில் அதிகபட்சமாக 40.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.
இந்த நிலையில் தற்போது கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி தொடர்ந்து நீடித்து வருவதால் தமிழகத்தில் இன்று முதல் அடுத்த ஏழு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்றும், நாளையும் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
ஏப்ரல் 23 முதல் 27 வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் முதல் 37 டிகிரி செல்சியஸ் ஐ ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 முதல் 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அதே சமயத்தில் இன்று முதல் 25ஆம் தேதி வரை தமிழகம், புதுவை, மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை விட அதிகபட்ச வெப்பநிலை இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அதிகரிக்க கூடும் எனவும் தெரிவித்துள்ளது.