என்ன தான் நடக்கிறது என்று பார்ப்போமே..!

Su.tha Arivalagan
Apr 13, 2026,01:19 PM IST

-வ. துர்கா தேவி


வெள்ளாவி

வச்சுத்தான் வெளுத்தாங்களா

என பார்க்கும் போதெல்லாம்

பாடத் தோன்றும்

ஒரு அழகுச் சிலை

அவள்.


வெண்பஞ்சுப் பாதங்களுடன்

தரைக்கும்

நோகாமல்,

தனக்கும்

நோகாமல்

மெல்ல 

அடி மேல் அடி

எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.




எட்டி நின்று

பார்க்கும் பழக்கமெல்லாம்

அவளுக்கு இல்லை.


சற்று

ஒதுங்கியே

நடந்தாள்.


நேரம்

செல்லச் செல்ல

அவளுக்கும்

ஒரு உந்துதல்.


என்ன தான்

நடக்கிறது

என்று

பார்ப்போமே என…


அவளும்

பெண்தானே!


பார்த்த கணம்

திகைத்தாள்.


புரியாமல்

தவித்தாள்.


புரிந்த பிறகு

சிரித்தாள்.


திகைத்தாள்—

ஆம்!


வெண்தாளில்

அழகான

ஆட்டுக்குட்டி

வரைந்திருந்தான்

அவன்.


இதில்

திகைக்க ஒன்றுமில்லையே..


ஆட்டுக்குட்டி

நின்றிருந்த

இடமோ

மிகப்பெரிய

ஆடுகளம்!


ஆடுகளத்தில்

ஆட்டுக்குட்டி

நிற்பதும்

யாரும் காணா

அதிசயமில்லையே...


ஆட்டின்

கால்களுக்கு கீழ்

ஏதோ

உருண்டையான

ஒன்று.


“நேற்று இல்லாத

மாற்றம் என்னது?”

என்று சிந்தித்த

கணம்—


எல்லாம்

விளங்கியது.


“வாலிபால்

ஆடுகளம்

வரைக”

என்ற

கேள்விக்கு


அந்தச் சிறுவனின்

அறிவார்ந்த

பதில் தான் அது.


“சிப்காட் -

குறிப்பு வரைக”

என்ற கேள்விக்கு

என்ன வரைய வேண்டும் என்று

என்னைக் கேட்ட

அந்த

தேர்வரை விட—


தானாகவே

கற்பனை

வெள்ளத்தை

அவிழ்த்து விட்ட

அந்தச் சிறுவன்

கொஞ்சம்

புத்திசாலித்தான்

போல…


எனக் கூறினேன்

என் தோழியிடம்,

அவள் தன்

அனுபவத்தை

பகிர்ந்த போது.


(வ துர்காதேவி, பட்டதாரி ஆசிரியர், அரசு உயர்நிலை பள்ளி-நெசல், திருவண்ணாமலை)