சர்வதேச மகளிர் தினத்திற்கு வித்திட்ட நாள் எது தெரியுமா
- ஸ்வர்ணலட்சுமி
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 8 ஆம் தேதி "சர்வதேச மகளிர் தினம்" உலகம் முழுவதும் உள்ள பெண்களை சிறப்பிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் 2026 "மகளிர் தினம் "மார்ச் எட்டாம் நாள் ஞாயிற்றுக்கிழமை அனுஷ்டிக்கப்படுகிறது.
மகளிர் தினத்தின் நோக்கமே பெண்களின் சாதனைகளை நிலை நிறுத்துவது, அவர்களுடைய சவால்களை அங்கீகரிப்பது, பெண்களுக்கான உரிமைகள் மற்றும் பாலின சமத்துவத்தில் அதிக கவனம் செலுத்துவது ஆகும். சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுவதும் பல்வேறு வகையாக கொண்டாடப்படுகிறது. அதனைப் பற்றிய சிறு தகவல் பார்ப்போம்...
சர்வதேச மகளிர் தினத்திற்கு வித்திட்ட நாள்:
ஆண்களுக்கு நிகராக பல்வேறு பணிகளில் பெண்கள் அந்த காலத்திலும் செய்து வந்தனர்.ஆனால், அவர்களுக்கு கிடைக்கும் ஊதியத்தில் வேறுபாடுகள் இருந்தது. இத்தகைய ஏற்றத்தாழ்வை எதிர்த்து 1910 ஆம் ஆண்டு டென்மார்க் நாட்டின் தலைநகர் கோபன்ஹேகனில் பெண்கள் இணைந்து போராட்டம் செய்தனர். இந்த ஒரு அற்புதமான நிகழ்வு தான் சர்வதேச மகளிர் தினத்திற்கு வித்திட்டது எனக் கூறப்படுகிறது.
அன்று நடந்த இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த ஜெர்மனி நாட்டின் புரட்சி பெண் கிளாரா ஜெட்கின் மகளிர்க்காக தனி நாள் ஒன்று வேண்டும் என்று வலியுறுத்தினார்.அதை சில நாடுகள் ஏற்றுக் கொண்டன. ஆனால் மகளிர் தினத்திற்கு என்று குறிப்பிட்ட தேதியை அறிவிக்காமல் ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு தேதியில் மகளிர் தினத்தை கொண்டாடி வந்தனர்.
இந்த நிலையில் 1917 ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடந்த 'பெண் புரட்சியாளர்களின் போராட்டம் 'மகளிர் தினத்திற்கு ஆதரவு கொடுக்காத மற்ற நாடுகளை திரும்பிப் பார்க்க வைத்தது. இந்த நிகழ்விற்கு பின்னரே மார்ச் 8-ம் தேதி சர்வதேச மகளிர் தினமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1975 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை இந்த நாளை அங்கீகரித்து அன்று முதல் உலகம் முழுவதும் மகளிர் தினம் மகிழ்ச்சியுடன் அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.
அமெரிக்காவில் 2011 ஆம் ஆண்டு முன்னாள் அதிபர் ஒபாமா மார்ச் மாதத்தை பெண்கள் வரலாற்று மாதமாக அறிவித்தார். அங்கு பல்வேறு தடைகளைத் தாண்டி சாதித்து வரும் பெண்களை கௌரவிக்கும் வகையில் அவர்களுடைய சாதனைகளை வெளியிட்டு கௌரவப்படுத்தினார்.
இங்கிலாந்தில் மகளிர் தினம் முக்கியமான நாளாக கொண்டாடப்படுகிறது. அங்கு ஆண்டுதோறும் மூன்று நாட்கள் மகளிர் தினம் கொண்டாடி வருகின்றனர்.அப்போது உலக அளவில் பெண்களை பாதிக்கும் பிரச்சினைகளை முன்னிறுத்துகின்றனர். மேலும் முக்கியமான பிரபலங்கள் மூலம் அந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்கின்றனர். அதுமட்டுமன்றி பெண்களின் திறமையை வெளிக் கொண்டு வரும் வகையில் வித்தியாசமான விளையாட்டு போட்டிகள் நடத்துகின்றனர். அதற்குரிய பரிசுகள் அளித்து கௌரவிக்கின்றனர்.
இத்தாலி நாட்டில் சர்வதேச மகளிர் தினம் 'லா பெஸ்ட்டா டெல்லா டோனா' என்று குறிப்பிடுகிறார்கள்.இந்த மாதத்தில் அங்கு பூக்கும் 'மிமோசா' மலர்களை பெண்களுக்கு கொடுத்து அவர்களை கௌரவப் படுத்துவார்கள். மிமோசா மலர்கள் பெண்களின் வலிமையின் அடையாளமாக பார்க்கப்படுகின்றன. எனவே, இந்த மிமோசா மலர்களை கொடுப்பதனால் பெண்களை கௌரவப்படுவதாக கருதப்படுகிறது .
ரஷ்யாவில் மார்ச் எட்டாம் தேதி தேசிய விடுமுறை தினமாக அனுஷ்டிக்கின்றனர். சம உரிமையை வலியுறுத்தும் வகையில் அன்று ஆண்கள் வீட்டில் உள்ள பெண்களுக்கு பிடித்த உணவுகளை சமைத்து, பரிசு பொருட்கள்,மஞ்சள் நிற மிமோசா மலர்களுடன், ரோஜா மலர்கள் பரிசளித்து கௌரவப்படுத்துகிறார்கள்.
மாசிடோனியா, உஸ் பெகிஸ்தான், செர்பியா, அல்பேனியா போன்ற நாடுகளில் மகளிர் தினத்தை அன்னையர் தினத்துடன் இணைத்து கொண்டாடுகின்றனர். பெண்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அன்றைய தினம் ஒருங்கிணைந்த விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டு கொண்டாடி மகிழ்கின்றனர். இவ்வாறு பல்வேறு நாடுகளில் மகளிர் தினம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மேலும் மகளிர் தின சிறப்புகள் பற்றிய தகவல்களை அடுத்த பதிவிலும் காண்போம்...
மேலும் இதுபோன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். வரைந்து எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.