தேமுதிகவின் புதிய பயணம்... இப்ப எந்த நிலையில் இருக்கிறது தேமுதிகவின் வாக்கு வங்கி?

Su.tha Arivalagan
Feb 19, 2026,02:40 PM IST
சென்னை: தமிழக அரசியலில் "திராவிடக் கட்சிகளுக்கு மாற்று" என்ற முழக்கத்துடன் களமிறங்கிய தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக), கடந்த இரு தசாப்தங்களாகப் பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்துள்ளது. கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ஆளுமையால் உருவான இந்த இயக்கம், தமிழக தேர்தல் வரலாற்றில் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கியதை மறுக்க முடியாது. ஆனால் இப்போது அதன் பலம் என்ன?

2005-ல் கட்சி தொடங்கப்பட்ட பிறகு, 2006 சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிட்டது. இதில் 8.38% வாக்குகளைப் பெற்று, தமிழக அரசியலில் ஒரு வலுவான மூன்றாவது சக்தி உருவாகிவிட்டதை உலகுக்கு பறைசாற்றியது.

2009 மக்களவைத் தேர்தலில் வாக்கு சதவீதம் சற்றே குறைந்தாலும், அக்கட்சி ஒரு தனித்துவமான வாக்கு வங்கியைக் கொண்டிருந்தது. இந்த இரு தேர்தல்களையும் தேமுதிக தனித்தே சந்தித்தது. யாருடனும் கூட்டணி அமைக்கவில்லை. தமிழ்நாடு முழுக்க புயல் போல விஜயகாந்த் ஊர் ஊராகப் போய் கட்சியை வளர்த்த காலம் அது. அதுவரை அப்படி யாரும் பயணித்ததில்லை என்று சொல்லும் அளவுக்கு தமிழ்நாட்டையே வளைத்து வளைத்து பயணம் செய்தார் விஜயகாந்த்.



ஆனால் 2011ல் நிலைமை மாறியது. தேமுதிக முதல் முறையா கூட்டணி அரசியலுக்குள் நுழைந்தது. தேமுதிகவின் அரசியல் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஆண்டு 2011. அதிமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட தேமுதிக, 7.88% வாக்குகளைப் பெற்றது. திமுகவை விட அதிக இடங்களை வென்று, தமிழக சட்டசபையில் முக்கிய எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தைப் பெற்று சாதனை படைத்தது. விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்றது அக்கட்சியின் உச்சகட்ட வளர்ச்சி.

ஆனால், 2011-க்குப் பிந்தைய காலங்களில் தேமுதிகவின் வாக்கு சதவீதம் சரிவைச் சந்திக்கத் தொடங்கியது. தொடர் சரிவை மட்டுமே அந்தக் கட்சி இதுவரை கண்டு வருகிறது.

2014 மக்களவைத் தேர்தலில்  0.38 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றது தேமுதிக.  2016 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து போட்டியிட்டபோது வாக்கு சதவீதம் 2.39% ஆகக் குறைந்தது. இது அக்கட்சிக்கு ஒரு பெரும் பின்னடைவாக அமைந்தது. 104 தொகுதிகளில் இக்கட்சி அப்போது போட்டியிட்டது. அந்தக் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, இடதுசாரிக் கட்சிகள் இணைந்திருந்தன. தற்போது அந்தக் கூட்டணிக் கட்சிகள் அனைத்துமே திமுகவில் இடம் பெற்றுள்ளது காலத்தின் கோலம்தான்.

2019 நாடாளுமன்றம் மற்றும் 2021 சட்டசபைத் தேர்தல்களில் மேலும் சரிவைச் சந்தித்தது தேமுதிக. விஜயகாந்த் உடல்நலக் குறைவு மற்றும் கட்சியின் தேர்தல் வியூகங்களால் வாக்கு வங்கி 1 சதவீதத்திற்கும் கீழ் (0.15% - 0.43%) போய் விட்டது.

தேமுதிகவின் தூணாக விளங்கிய விஜயகாந்த் மறைவிற்குப் பிறகு அக்கட்சி சந்தித்த முதல் தேர்தல் 2024 மக்களவைத் தேர்தல். இத்தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேமுதிக போட்டியிட்டது. ஆனால் அக்கட்சிக்கு வெறும் 0.17% வாக்குகளே கிடைத்தன. பெரும்  சோகமாக விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரன், விருதுநகர் தொகுதியில் தோல்வியைத் தழுவினார். 

கேப்டன் இல்லாத நிலையில், கட்சியை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வருவது அக்கட்சியின் தற்போதைய தலைமைக்கு ஒரு பெரும் சவாலாகவே உள்ளது. இந்த நிலையில்தான் பல்வேறு கணக்குகளைப் போட்டுப் பார்த்து திமுக கூட்டணியில் இணைந்துள்ளது தேமுதிக.