சாதனை என்பது...!
- தமிழ்மாமணி இரா.கலைச்செல்வி
சாதனை என்பது...!
கோடி கோடியாய் சொத்து சேர்ப்பதா..?
பளபளக்கும் மாளிகை கட்டுவதா..?
ஏதோ ஒரு வகையில் உலகபுகழ் பெறுவதா..?
இல்லவே இல்லை .ஒருபோதும் இல்லை..!!
நித்தம் நித்தம் நீ போராடி நேர்மையாக ...
நிம்மதியாக வாழ்வதே உலக சாதனை..!!
தோல்விகள் உன்னைத் தொடர்ந்து துரத்தினாலும்...
துவளாமல் நீ மீண்டு எழுவதும் சாதனையே..!!
உனக்காக மட்டுமே வாழ்ந்து மடியாமல்,
உன் சமுதாயத்திற்கு உன் சிறு பங்களிப்பும்,
மனிதம் போற்றும் மாண்புடன் வாழ்தலும்,
மண்ணில் அதுவே மாபெரும் சாதனை..!!
*
இதுவும் சாதனைதான்
சிறிய விதைக்குள் மறைந்திருக்கும் ஆலம்போல் ,
சாதனை என்பது சிறியதாய் இருக்கலாம்..!!
நீ உணர்ந்து தெளிந்த சிறு உலகஉண்மையை...
நின் உலகிற்கு புரிய வைப்பதும் சாதனைதான்..!!
பிறர் கண்களுக்குத் தெரியாத மனப்போராட்டத்தில்,
பிறர்வியக்க நீ அடையும் வெற்றியும் சாதனைதான் ..!!
வருத்தங்கள் உன்னை இறுக்கிய போதும்...
வலிகளைத் தாங்கிய உன்உறுதியும் சாதனைதான்.!!
உன் இலக்கை தொட... தொடர்ந்து முயற்சித்து,
உயர்ந்து காட்டுவதும் உனக்கு சாதனைதான்..!!
அடுத்தவர் மனம் காயப்படாமல்... அறத்துடன்,
அன்புடன் வாழும் ஒவ்வொரு நாளும் சாதனைதான்..!!
(சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, தமிழ்நாடு அரசின் தலைமை செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற உயர் அரசு அதிகாரி ஆவார் . அவரின் கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும் , வாசிப்பின் மீதும், தீராக் காதல் கொண்ட அவர், நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒளிபரப்பாகி உள்ளன. கதைகளைத் தவிர, கவிதைகளும், ஆய்வு கட்டுரைகளையும் அதிகம் எழுதி வரும் இவர் உளவியலில் முதுகலை பட்டமும் பெற்றவர் . சாதனைப் பெண், தமிழ் மாமணி, தங்கத்தாரகை, சேவா ரத்னா , கவிஞாயிறு, கவியருவி, கவிச்செம்மல், உழைப்பாளர் திலகம், மகாகவி, செம்மொழி கலைஞர் விருது போன்ற 15 க்கும் மேற்பட்ட விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.)