Unified ADMK: செங்கோட்டையன் கருத்துக்கு பெருகும் ஆதரவு.. என்ன செய்ய போகிறார் இபிஎஸ்?

Su.tha Arivalagan
Sep 05, 2025,05:19 PM IST

சென்னை: அதிமுக.,வில் இருந்து விலகிச் சென்ற அனைவரும் ஒன்று சேர வேண்டும். அதற்கான முயற்சியில் 10 நாட்களில் கட்சியின் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி ஈடுபட வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.


செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து முடித்த உடனேயே அவரது கருத்து குறித்து ஓ.பன்னீர்செல்வம், பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட பலரிடமும் கருத்து கேட்கப்பட்டது. இதற்கு அனைவருமே ஒரே மாதிரியாக, அதிமுகவில் அனைவரும் ஒன்று பட வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார்கள். ஓபிஎஸ் தரப்பில் இருப்பவர்களும் செங்கோட்டையனின் கருத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.  அரசியல் சாராத சிலரும் கூட செங்கோட்டையனின் கருத்திற்கு ஆதரவு தெரிவித்து வருவதாக சொல்லப்படுகிறது. 




இதற்கிடையில் தற்போது தென் மாவட்டங்களில் பிரச்சார சுற்றுப் பயணத்தில் இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி, இன்று காலை ஆண்டிப்பட்டியில் விவசாயிகளுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளார். செங்கோட்டை பேசியது குறித்து இதுவரை எடப்பாடி பழனிச்சாமியோ, அவரது தரப்பை சேர்ந்தவர்களோ யாரும் கருத்து தெரிவிக்கவில்லை. இப்போது இபிஎஸ் என்ன பதில் சொல்ல போகிறார்? இந்த விவகாரத்தை எப்படி கையாள போகிறார் என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.


இந்த விவகாரத்தில் இபிஎஸ் என்ன செய்ய போகிறார் என்பதை விட, செங்கோட்டையன் சொன்ன விஷயங்களை தான் உற்று கவனிக்க வேண்டும். கட்சியில் இருந்து பிரிந்து சென்ற அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்று தெரிவித்தவர், யாரை கட்சியில் சேர்க்க வேண்டும் என யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை. அதே போல், யார் யாரை கட்சியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை எடப்பாடி பழனிச்சாமி தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் கூறி உள்ளார். அப்படியானால், பொதுவாக கட்சியில் இருந்து பிரிந்து சென்ற அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் பேசிவில்லை. யாரோ ஒருவரையோ அல்லது ஒரு சிலரையோ மனதில் வைத்து வைத்து இபிஎஸ்.,க்கு இப்படி ஒரு வலியுறுத்தலை முன் வைத்துள்ளார்.


அதே போல் சசிகலாவை சந்தித்தீர்களா என கேட்டதற்கும், சஸ்பென்ஸ் என ஒரே வார்த்தையில் முடித்து விட்டார் செங்கோட்டையன். செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, அவர் என்ன கவர்னரிடம் மனுவா கொடுத்தார்? என பதில் கேள்வி எழுப்பினார். மறப்போம், மன்னிப்போம் என்ற வார்த்தையையும் குறிப்பிட்டார். இவற்றை மொத்தமாக வைத்து பார்த்தால் ஓபிஎஸ்.,ஐ தான் மீண்டும் கட்சியில் ஒன்று சேர்க்க வேண்டும் என செங்கோட்டையன் குறிப்பிடுகிறார் என்பது புரிகிறது. 


சசிகலா, தினகரனை தான் செங்கோட்டையன் குறிப்பிடுகிறார் என்று எடுத்துக் கொண்டால், 2 நாட்களுக்கு முன்பு கூட, துரோகம் இழைத்தவர்களுக்கு எதிராக தொடங்கப்பட்ட கட்சி என மறைமுகமாக இபிஎஸ்.,ஐ தாக்கி பேசினார். சசிகலாவும் தனது பங்கிற்கு, தன்னை அதிமுக பொதுச் செயலாளர் என குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டார். அதனால் இவர்களை மீண்டும் கட்சியில் சேர்த்தால் மீண்டும் யார் பொதுச் செயலாளர் என்ற அதிகார போட்டி வர வாய்ப்புள்ளது. தேர்தல் சமயத்தில் இது அதிமுக.,விற்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். மற்றொரு புறம், ஓபிஎஸ்.,ஐ தான் செங்கோட்டையன் குறிப்பிடுகிறார் என்றால், அவர் கேட்டது போல் கவர்னரிடம் மனு கொடுக்கவில்லை. ஆனால் கட்சியின் சின்னத்தையே முடக்க பல கோர்ட்டுகளில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்குகள் இப்போது வரை நிலுவையில் இருந்து கொண்டு தான் உள்ளன.


இபிஎஸ் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்தும் ஓபிஎஸ் தரப்பில் பல வழக்குகள் போடப்பட்டுள்ளன. இவற்றின் மீதும் விசாரணை நடந்து கொண்டு தான் உள்ளது. வேட்பாளர் யாராக இருந்தாலும் ஒட்டுமொத்த அதிமுக.,விற்கும் அடையாளமாக திகழ்வது இரட்டை இலை சின்னம் தான். எம்ஜிஆர், ஜெயலலிதா காலம் முதலே இரட்டை இலை என்ற சின்னத்தை மட்டுமே வைத்து அதிமுக வெற்றி பெற்ற தேர்தல்கள் பல. அப்படி இருக்கும் போது அதையே முடக்க சுப்ரீம் கோர்ட் வரை சென்ற ஓபிஎஸ்.,ஐ சேர்க்க இபிஎஸ் எப்படி ஒப்புக் கொள்வார்? அதிமுக.,வின் உண்மையான தொண்டர்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என்ற கேள்வியும் எழுகிறது.