அதிமுகவிலிருந்து விலகி.. தவெக.வில் இணையும் 2 விஜயபாஸ்கர்கள்...அடுத்து என்ன நடக்கும்?
சென்னை : தங்களின் அதிமுக எம்எல்ஏ., பதவியை ராஜினாமா செய்துள்ள முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகிய இருவரும் நாளை மறுநாள், அதாவது ஜூலை 02ம் தேதி விஜய் முன்னிலையில் தவெக.,வில் இணைய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, விஜய் தலைமையிலான தவெக அரசு அமைந்தது முதல் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களும் தொடர்ந்து தவெக.,வில் இணைந்து வருகின்றனர். குறிப்பாக அதிமுக.,வை சேர்ந்த மரகதம் குமாரவேல், சத்யபாமா, ஜெயக்குமார், இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களின் எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்து விட்டு தவெக.,வில் சென்று இணைந்தனர்.
இவர்களைத் தொடர்ந்து சி.விஜயபாஸ்கரும், எம்.ஆர்.விஜயபாஸ்கரும் தங்களின் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளனர். எம்எல்எ., பதவியை ராஜினாமா செய்ததும் கடந்த வாரமே சி.விஜயபாஸ்கர் தவெக.,வில் சென்று இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் கடைசி நிமிடத்தில் தனது முடிவை ஒத்திவைத்ததாக சொல்லப்பட்டது.
இந்நிலையில் தற்போது எம்.ஆர்.விஜயபாஸ்கரும் தனது எம்எல்ஏ., பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவர் ஜூலை 02ம் தேதியன்று தவெக.,வில் சென்று இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவருடன் சேர்ந்து சி.விஜயபாஸ்கரும் நாளை மறுநாள் விஜய் முன்னிலையில் தவெக இணைய உள்ளதாக சொல்லப்படுகிறது.
அடுத்து என்ன நடக்கும்?
அதிமுக.,வை சேர்ந்த எம்எல்ஏ.,க்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து வரும் நிலையில், மேலும் சில எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா செய்ய உள்ளதாகவும், அவர்களும் தவெக.,வில் சென்று இணைய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழகத்தில் ஏற்கனவே 7 தொகுதிகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. சட்டசபையில் தற்போது தவெக.,விற்கு 107 எம்எல்ஏ.,க்கள் உள்ளனர். விஜய் ஏற்கனவே தனது திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ., பதவியை ராஜினாமா செய்து விட்டனர். சட்டசபையில் தவெக தனி பெரும்பான்மை பெறுவதற்கு இன்னும் 11 அல்லது 12 எம்எல்ஏ.,க்கள் தேவை.
அதிமுக.,வில் இருந்து இன்னும் சில எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா செய்தால் அந்த இடங்களுக்கு சேர்த்து இடைத்தேர்தல் நடத்தப்படும். அப்படி நடந்தால் விஜய்யின் செல்வாக்கை பயன்படுத்தி, அனைத்து தொகுதிகளிலும் தவெக.,வே வென்று விடும். அப்படி வெற்றி பெற்றால், தவெக அரசுக்கு பெரும்பான்மை கிடைத்து விடும். அதற்கு பிறகு மற்ற கட்சிகளின் ஆதரவை நம்பி இருக்க வேண்டிய அவசியம் இருக்காது. இதனால் அதிமுக.,வில் அடுத்து ராஜினாமா செய்ய போவது யார் என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது.