கோவில்மணி ஓசை தன்னை கேட்டதாரோ.. கேட்டா இதெல்லாம் ஞாபகத்துக்கு வரும்!

Su.tha Arivalagan
Dec 27, 2025,11:40 AM IST

கம்பீரமான கொடி மரம்

கலைநயத்தை பறைசாற்றும் ராஜ கோபுரம்

சிறகடித்து பறக்கும் மாடப்புறா

சிறுபிள்ளையாய் தலையாட்டும் களிறு

மாடவீதியில் திருவீதியுலா

சிக்கு கோலங்கள் அலங்கரிக்கும் பிரகாரம்

நரை குடுமி ஐயர்

அவ்வை சண்முகி மடிசார் மாமி

தொன்னையில் கமகமக்கும் வெண் பொங்கல்

மனம் லயிக்கும் வாசமுடன் கருவறை

மஞ்சள் அருவியாக அபிஷேக நீர்

துயில் எழுப்பும் அதிகாலை சுப்ரபாதம்




கொலுசு சிரிக்கும் நங்கையரின் பாதங்கள்

பட்டில் பாங்காய் குடும்பப்பெண்

தடுக்கும் வேட்டியுடன் மெல்ல நடக்கும் காளையர்

கறை வைத்த பாவாடையில் இளம் தேவதைகள்

மீன்கள் கொத்தும் தெப்பக்குளம்

மழலைகள் ருசிக்கும் திருநீர்

நெற்றியில் மணக்கும் சந்தனத்தோடு குங்குமம்

மனமுருகி பிரார்த்திக்கும் கண்ணீர் துளிகள்

திசையெங்கும் சிதறும் தேங்காய் சில்லுகள்

தெய்வ நாமம் முணுமுணுக்கும் உதடுகள்

எண்ணெய் பிசுக்கும் கைரேகை பதிவுகளுடன் நவகிரக பிரகாரம்

மௌனமாய் பரிமாறும் விழிமொழிகள்

ஒற்றை துண்டுடன் தனியாய் தொந்தி பிள்ளையார்

நாதஸ்வர மங்கல ஓசை

பிரார்த்தனைகளின் சுவடுகளோடு ஸ்தல விருட்சம்

கோயில் மணியோசைக்கு இத்துணை ஆற்றலா!!!!!

ஓர் அசைவில் நினைவூட்டுகிறதே இத்தனையையும்...


(வ.துர்காதேவி, பட்டதாரி ஆசிரியர்- ஆங்கிலம், திருவண்ணாமலை மாவட்டம்)