கோவில்மணி ஓசை தன்னை கேட்டதாரோ.. கேட்டா இதெல்லாம் ஞாபகத்துக்கு வரும்!
கம்பீரமான கொடி மரம்
கலைநயத்தை பறைசாற்றும் ராஜ கோபுரம்
சிறகடித்து பறக்கும் மாடப்புறா
சிறுபிள்ளையாய் தலையாட்டும் களிறு
மாடவீதியில் திருவீதியுலா
சிக்கு கோலங்கள் அலங்கரிக்கும் பிரகாரம்
நரை குடுமி ஐயர்
அவ்வை சண்முகி மடிசார் மாமி
தொன்னையில் கமகமக்கும் வெண் பொங்கல்
மனம் லயிக்கும் வாசமுடன் கருவறை
மஞ்சள் அருவியாக அபிஷேக நீர்
துயில் எழுப்பும் அதிகாலை சுப்ரபாதம்
கொலுசு சிரிக்கும் நங்கையரின் பாதங்கள்
பட்டில் பாங்காய் குடும்பப்பெண்
தடுக்கும் வேட்டியுடன் மெல்ல நடக்கும் காளையர்
கறை வைத்த பாவாடையில் இளம் தேவதைகள்
மீன்கள் கொத்தும் தெப்பக்குளம்
மழலைகள் ருசிக்கும் திருநீர்
நெற்றியில் மணக்கும் சந்தனத்தோடு குங்குமம்
மனமுருகி பிரார்த்திக்கும் கண்ணீர் துளிகள்
திசையெங்கும் சிதறும் தேங்காய் சில்லுகள்
தெய்வ நாமம் முணுமுணுக்கும் உதடுகள்
எண்ணெய் பிசுக்கும் கைரேகை பதிவுகளுடன் நவகிரக பிரகாரம்
மௌனமாய் பரிமாறும் விழிமொழிகள்
ஒற்றை துண்டுடன் தனியாய் தொந்தி பிள்ளையார்
நாதஸ்வர மங்கல ஓசை
பிரார்த்தனைகளின் சுவடுகளோடு ஸ்தல விருட்சம்
கோயில் மணியோசைக்கு இத்துணை ஆற்றலா!!!!!
ஓர் அசைவில் நினைவூட்டுகிறதே இத்தனையையும்...
(வ.துர்காதேவி, பட்டதாரி ஆசிரியர்- ஆங்கிலம், திருவண்ணாமலை மாவட்டம்)