பாஜகவின் அடுத்த தலைவர் யார்? ரகசியமாக காய் நகர்த்தும் கட்சி தலைமை
டில்லி : 2024 லோக்சபா தேர்தல் நிறைவடைந்து, பாஜக 3வது முறையாக மத்தியில் ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு காலம் நிறைவடைந்து விட்டது. இந்நிலையில் ஜே.பி. நட்டாவிற்குப் பிறகு கட்சியின் அடுத்த தேசியத் தலைவராக யார் வருவார் என்பதில் அனைவரின் பார்வையும் உள்ளது.
2024 பொதுத் தேர்தல்கள் முடிவடைந்த நிலையில், பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தனது அடுத்த தேசியத் தலைவரை நியமிப்பதில் கவனம் செலுத்தி வருகிறது. இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்றாலும், ரகசியம் ஆலோசதங்கள் நடந்து வருவதாகவும், ஜூன் மாத நடுப்பகுதியிலேயே இதற்கான செயல்முறைகள் தொடங்கலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
தேசியத் தலைவர் தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாக, பெரும்பாலான மாநிலங்களில் பாஜக ஏற்கனவே அமைப்புத் தேர்தல்களை முடித்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் சமீபத்தில் 70 மாவட்டத் தலைவர்கள் நியமிக்கப்பட்டதால் மத்திய தலைமையின் முடிவு உடனடியாக வரலாம் என்ற எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. இருப்பினும், ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்த செயல்முறை சற்று தாமதமாகி உள்ளதாக சொல்லப்படுகிறது. இப்போது, அந்தப் பிரச்சினை முடிந்த நிலையில், தேசியத் தலைமையை இறுதி செய்வதற்கு பாஜக முன்னுரிமை அளித்து வருவதாகக் கூறப்படுகிறது.
தேசிய தலைவர் பதவிக்கு 3 முக்கியப் போட்டியாளர்கள் :
பாஜக தேசிய தலைவர் பதவிக்கு, மூன்று பெயர்கள் உயர் மட்டத்தில் பேசப்படுவாக சொல்லப்படுகிறது. இவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு அனுபவம், சாதி அடையாளம் மற்றும் பிராந்திய முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளனர். ஒடிசாவைச் சேர்ந்த செல்வாக்கு மிக்க OBC தலைவரும், வலுவான அமைப்பு ரீதியான பின்னணியும் கொண்ட மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் முக்கியப் போட்டியாளராகக் கருதப்படுகிறார்.
மத்தியப் பிரதேசத்தின் நீண்டகால முன்னாள் முதலமைச்சரும், தற்போது மத்திய அமைச்சருமான சிவராஜ் சிங் சவுகான் "அடித்தள அனுபவம் கொண்ட மக்கள் தலைவர்" ஆகப் பார்க்கப்படுகிறார். இதற்கிடையில், ஹரியானா முதல்வராக இருந்து சமீபத்தில் மத்திய அமைச்சரவைக்கு மாறிய மனோகர் லால் கட்டார் நிர்வாக ஸ்திரத்தன்மையின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறார்.
இது வரை வெளியான தகவல்களின் படி பாஜக.,வின் இறுதி முடிவு "அமைப்பு ரீதியான அனுபவம், பிராந்திய பிரதிநிதித்துவம் மற்றும் சாதி சமநிலை" ஆகியவற்றின் கலவையாக இருக்கும் என சொல்லப்படுகிறது
நட்டாவிற்கு என்ன நடக்கும்?
தற்போதைய தேசியத் தலைவராக உள்ள ஜே.பி. நட்டா ஜனவரி 2020 முதல் பாஜகவை வழி நடத்தி வருகிறார். 2024 பொதுத் தேர்தல்களில் கட்சியை வழிநடத்த அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது. தேர்தல் முடிந்த நிலையில், தலைமை மாற்றத்திற்கான விவாதங்கள் வேகம் எடுத்துள்ளன. வேட்பு மனுக்கள், பரிசீலனை மற்றும் தேவைப்பட்டால் வாக்களிப்பு உட்பட உள் செயல்முறையை மேற்பார்வையிட ஒரு மத்திய தேர்தல் குழு அமைக்கப்படும். நட்டா மற்றொரு முழு பதவிக்காலத்திற்கு முயற்சிப்பாரா அல்லது கட்சி புதிய தலைமையை தேர்ந்தெடுக்குமா என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.