பாகிஸ்தான் ராணுவத் தளபதியை.. அமெரிக்க அதிபர் டிரம்ப் நேரில் அழைத்து விருந்து வைத்தது ஏன்?

Su.tha Arivalagan
Jun 19, 2025,10:04 AM IST

வாஷிங்டன்: பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீருக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வெள்ளை மாளிகைக்கு வரவழைத்து மதிய உணவு விருந்து அளித்துக் கெளரவித்துள்ளார். இது சர்வதேச அளவில் பேசு பொருளாகியுள்ளது. பாகிஸ்தான் அரசு முறைத் தலைவர்கள் அல்லாமல் ஒரு ராணுவ தளபதிக்கு அமெரிக்க அதிபர் இப்படி தனியாக விருந்து அளித்துக் கெளரவித்தது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.


இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலைத் தவிர்ப்பதில் ஆசிம் முனீர் ஆற்றிய மிக முக்கியமான பங்களித்ததாக விருந்து நிகழ்ச்சியின்போது அதிபர் டிரம்ப் பாராட்டினார். இந்தியாவுடன் போர் புரியாமல், இத்துடன் முடிவுக்குக் கொண்டுவந்ததற்காகவே நான் அவரை இங்கு வரவழைத்து நன்றி கூற விரும்பினேன் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.


இந்தச் சந்திப்பு பல வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. ஒரு அமெரிக்க அதிபர், பாகிஸ்தானின் சக்திவாய்ந்த ராணுவத் தலைவரை, அவரது நாட்டின் மூத்த சிவில் அதிகாரிகள் எவரும் துணையின்றி, வெள்ளை மாளிகையில் விருந்துக்கு அழைத்தது இதுவே முதன்முறை. பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்புக் கொள்கைகளில் ராணுவத் தளபதியின் தாக்கம் பெரிது என்பதால்தான் அவரை தனியாக அழைத்து விருந்து கொடுத்துள்ளார் டிரம்ப் என்கிறார்கள். 


ஈரானை வழிக்குக் கொண்டு வரும் முயற்சியா?




ஆனால்  பாகிஸ்தான் ராணுவத் தளபதியை ஸ்பெஷலாக அமெரிக்கா கவனித்ததற்கு பின்னணியில் ஈரான் - இஸ்ரேல் விவகாரம்தான் முக்கியமாக உள்ளதாக கருதப்படுகிறது.


பாகிஸ்தானுக்கும், ஈரானுக்கும் இடையே மிக மிக நெருக்கமான நட்பு உண்டு. இரண்டும் முஸ்லீம் நாடுகள் என்பதை விட பல வழிகளில் ஈரானுடன் நல்ல நட்புடன் இருக்கிறது பாகிஸ்தான். சமீபத்தில் கூட, ஈரான் மீது அமெரிக்காவோ, இஸ்ரேலோ அணு ஆயுதத்தைப் பயன்படுத்தினால், எங்களுக்காக அணு ஆயுதத்தை நாங்கள் பயன்படுத்துவோம் என்று பாகிஸ்தான் உத்தரவாதம் அளித்திருப்பதாக ஈரான் தலைவர் ஒருவர் கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.


ஆனால் பாகிஸ்தான் தரப்பில் இந்த செய்தியை மறுக்கவும் இல்லை, அதேபோல ஆமோதிக்கவும் இல்லை. ஆனால் அமெரிக்கா, இஸ்ரேல் ஆகியவை, இந்தப் பேச்சை சாதாரணமாக எடுத்துக் கொள்ள விரும்பவில்லை. பகிரங்கமாக இல்லாவிட்டாலும் கூட ரகசியமாக பாகிஸ்தான் ஈரானுக்கு உதவலாம் என்ற சந்தேகம் உள்ளது.


தற்போது இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் ஈரானைத் தாக்கத் திட்டமிட்டு வருகிறது. இந்த நிலையில்தான் பாகிஸ்தான் ராணுவத் தளபதியை அழைத்து விருந்து கொடுத்துள்ளார் அதிபர் டிரம்ப். இதனால் பாகிஸ்தான் ராணுவத் தளபதியுடன் இந்தியாவைப் பற்றிப் பேசியதை விட ஈரான் தொடர்பாகத்தான் அதிகமாக அதிபர் டிரம்ப் பேசியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.


இதை டிரம்ப்பே தனது பேட்டியின்போது வெளிப்படுத்தினார். அவர் கூறுகையில், பாகிஸ்தான் தலைவர்கள் ஈரானை மிகவும் நன்கு அறிந்திருக்கிறார்கள், பெரும்பாலானவர்களை விட சிறப்பாக. இஸ்ரேலுடன் விரோதம் கொண்டவர்கள் என்பதல்ல. அவர்கள் இருவரையும் உண்மையில் அறிந்திருக்கிறார்கள், ஆனால் ஈரானை அவர்கள் நன்றாக அறிந்திருக்கலாம். என்ன நடக்கிறது என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர், அதோடு என்னுடைய கருத்துடன் பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஒத்துப்போனார் என்று டிரம்ப் விளக்கினார். 

முன்னதாக, இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களை பாகிஸ்தான் கடுமையாகக் கண்டித்திருந்தது. ஈரான் மீதான தாக்குதல்கள் சர்வதேச சட்டங்களை மீறுவதாகவும், பிராந்திய அமைதிக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் பாகிஸ்தான் கருத்து தெரிவித்துள்ளது.


அதிபர் டிரம்ப் அளித்த விருந்தின்போது, பாகிஸ்தான் ராணுவத் தளபதியுடன், பாகிஸ்தான் உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐ தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஆசிம் மாலிக்கும் உடனிருந்தார். 


பாகிஸ்தான் ராணுவத் தளபதி மூலமாக பாகிஸ்தான் அரசுக்கும், ஈரானுக்கும் முக்கியமான செய்திகளை அமெரிக்கா பகிர்ந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக நாங்கள் ஈரானைத் தாக்கப் போகிறோம், நீங்கள் விலகியிருக்க வேண்டும் என்ற எச்சரிக்கையும் கூட பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்டிருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.