அரிசியை இலவசமாக கொடுக்கும் அரசு குவார்ட்டர் பாட்டிலை வழங்காதது ஏன்? சீமான் ஆவேசம்!

Meenakshi
Feb 18, 2026,06:49 PM IST

சென்னை: விவசாயிகள் கஷ்டப்பட்டு விளைவிக்கும் அரிசியை இலவசமாக கொடுக்கும் அரசு, குவார்ட்டர் பாட்டில்களை வழங்காதது ஏன்  என்று  திருச்சியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.



இந்தாண்டிற்கான சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் அனைத்தும் கட்சிப்பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், திருச்சியில் வரும் 21ம் தேதி நாம் தமிழர் கட்சி சார்பில் மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு 2026 என்ற தலைப்பில் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில், தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் களம் காணப்போகும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை அறிவிக்க உள்ளார். இந்த மாநாட்டிற்காக நடக்கும் பணிகளை அவர் மேற்பார்வையிட இன்று திருச்சி வந்தார். 




அதன்பின்னர் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில்,  மாற்றத்தை விரும்பும் மக்களுக்கான மாநாடு வரும் 21ம் தேதி திருச்சியில் நடைபெற உள்ளது. இந்த மாநாடு தமிழ அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும். மாநாட்டில், 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிமுகம் நடைபெற உள்ளது. வேட்பாளர்கள் அறிவிப்பிற்கு பின்னர் தேர்தல் பணிகள் முழுவீச்சில் தொடங்கும். தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் கடன் வாங்கி நிறைவேற்றப்பட்டவை. இந்த மாதிரியான ஆட்சி முறையை தான் எதிர்பார்க்கிறீர்களா? 5,000 ரூபாயை நாங்கள் கேட்கவே இல்லை. இப்போது இதனை எதை வைத்து கட்டுவீர்கள். யாரு காசு இது?


அதுட்டும் இன்றி சுற்றுசூழல் பிரச்சினை மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. நீரற்ற நிலமாக பூமி மாறிவிட்டது. மரம் என்பது வெறும் மரம் அல்ல. அதுதான் நமது உயிர். மரம் எவ்வளவு முக்கியம் என்பதை சொல்லிக் கொடுக்க வேண்டியது கட்டாயம். தமிழ்நாட்டில் யாரும் கட்டாயப்படுத்தி மதம் மாறவில்லை விரும்பி தான் மதம் மாறி உள்ளார்கள். மதம் என்பதும், வழிபாடு என்பதும், உடை என்பதும் உணவு என்பதும், கல்வி என்பதும் அவரவர் உரிமை. அதற்கு தான் போராடி பெறப்பட்டது சுதந்திரம். அதில் தலையீடுவது கூடாது.


மக்களுக்கு மிக்ஸி, கிரைண்டர், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை என எல்லாவற்றையும் இலவசமாகக் கொடுக்கிறீர்கள். ஆனால், அரசாங்கத்திற்கு அதிக வருமானம் தரும் மதுவை மட்டும் ஏன் காசு கொடுத்து வாங்கச் சொல்கிறீர்கள்? அதையும் இலவசமாகவே கொடுக்க வேண்டியதுதானே? என்று தெரிவித்துள்ளார்.