மக்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்?

Su.tha Arivalagan
May 05, 2026,04:30 PM IST

- டி.கலைமணி


அவர்களில் பெரும்பாலான மக்கள் சுயமாக சிந்திக்கும் ஆற்றலை அறவே மறந்துவிட்டார்கள் யார் எதை சொன்னாலும் அப்படியே நம்பிவிடுவது


ஒரு ஏமாற்றுக்காரன், அவனுக்கென்று எந்த சொத்துக்களோ அல்லது ஏதாவது வருவாய் ஈட்டும் தொழிலோ, ஏன் இருப்பதற்கு ஒரு இடம் கூட இல்லாதவனோ, ஊடகங்கள் மூலம். பொய்களை பரப்பி பொய்யான கவர்ச்சியான வாக்குறுதிகளை அளிக்கிறான்.


உடனே அதை நம்பி ஒன்றுமே விசாரிக்காமல் விளக்கில் விழுந்து மாயும் விட்டில் பூச்சிகள் போல தங்களிடம் உள்ள அனைத்து காசையும் அவனிடம் ஒப்படைத்து விட்டு அவன் தருவதாக சொல்லிய காசை மனதில் நினைத்து மனக் கோட்டை கட்டத் தொடங்கி விடுகிறார்கள்.


அவனிடம் எதுவும் இல்லையே, அவன் எப்படி தங்களுடைய மூலதனத்தை ரெட்டிப்பாக அல்லது பல மடங்காக அதிகரித்து தருவான் என்று ஒருவரும் ஒரு கணம் கூட நிணைத்து பார்ப்பதில்லை .


அந்த புரட்டனும் ஓரிரண்டு மாதங்களுக்கு ஒழுங்காக காசு தருகிறான். பிறகு மொத்த பணத்தையும் சுருட்டிக் கொண்டு இரவோடு இரவாக ஊரை விட்டே ஓடிவிடுகிறான். 


பிறகு தான், விழித்து  கொள்கிறது மக்கள் கூட்டம். காவல் துறை, நீதிதுறை என்று அழுது புலம்பி திரியும் அவல காட்சிகள். தினம்தோறும் தமிழ் நாட்டில் அரங்கேறும் காட்சி இது. 




ஒவ்வொரு நாளும் ஒரு புரட்டன் வலை விரிக்கிறான். புதிய கண்டுபிடிப்புகளோடு அவன் விரித்த வலையில் சிறிய மீன்களும், பெரிய திமிங்கிலம், சுறா போன்ற மீன்களும் சிக்குகின்றன.

திரும்பவும் அதே கதைதான்

அதே புலம்பல், ஒப்பாரி காட்சிகள். 


மக்கள் திருந்தவே மாட்டார்களா? ஏன்?

அவர்கள் நேர்வழியில் காசு சம்பாதிக்கும் கலையில் நம்பிக்கை இல்லை.


குறுக்கு வழியில், அரசை ஏமாற்றி, மற்றவர்களை ஏமாற்றி குறுகிய காலத்தில் பணக்காரர்களாகி சொகுசாக வாழ  வேண்டும் என்று பேராசைதான் காரணம் .


இதைபோல்தான் மக்களுடைய சோம்பேறித்தனத்தையும், அறியாமையும், பயன்படுத்தி வீடுகட்டித்தருகிறோம் வெளிநாட்டில் வேலை வாங்கி தருகிறோம், கோடி கணக்கில் குறைந்த வட்டிக்கு. கடன் வாங்கி. தருகிறோம், பரிகார பூஜை செய்கிறேன் என்று லட்சக்கணக்கில் பணம் கறக்கும் போலி சாமியார்கள். தீர்வே காணாத நோய்களை தீர்த்து விடுகிறேன் என்று தொலைகாட்சியில் தோன்றி பேட்டி அளிக்கும் போலி மருத்துவர்கள் என்று பலவிதமாக  ஆசை காட்டி பணம் பறிக்கும் கும்பல்கள் தமிழ்நாடு முழுவதும். தங்கள் கடைகளை விரித்து மக்களை ஏமாற்றிக் கொண்டே இருக்கின்றனர்.


மக்களும் ஏமாந்து கொண்டேதான் இருக்கிறார்கள். யாரும் திருந்துவதாக இல்லை.


கண்ணால் காண்பதும் பொய், காதால் கேப்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என்ற பழமொழியை  மக்கள் சிந்திக்காதவரை நாட்டுக் கோழிகளும் , ஈமு கோழிகளும் அவர்களை ஏமாற்றி கொழுத்துக் கொண்டு தமிழ்நாட்டில் வலம் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள்


(சென்னையைச் சேர்ந்த டி. கலைமணி, பக்தி, தத்துவம் என பல் சுவை பாடல்கள், கவிதைகள் எழுதுவதில் கை தேர்ந்தவர்)