விநாயகர் சிலைகளை ஏன் நீர் நிலைகளில் கரைக்கிறார்கள் என்று தெரியுமா?

Swarnalakshmi
Aug 28, 2025,03:01 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


விநாயகர் சதுர்த்தியின் போது சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறோம். இதற்கு ஒரு காரணம் உள்ளது.


ஐந்து கரத்தனை யானை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன் தனை ஞானக் கொழுந்தினை புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே  ( திருமந்திரம்)


விநாயகர் சிலைகளை நீரில் கரைப்பதை விசர்ஜனம் என்று சொல்வோம். "விசர்ஜனம்" மற்றும் விநாயகர் பெருமைகளை இப்போது காண்போம்...




 "விசர்ஜனம் "என்ற வார்த்தைக்கு அசைவின்றி கிடக்குதல் அல்லது ஓய்வெடுக்க செய்தல் என்ற பொருள்.விநாயகர் சதுர்த்தி பண்டிகையின் போது பூஜையில் வழிபாட்டிற்கு வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கும் செயலை "விசர்ஜனம்" என்று அழைக்கப்படுகிறது. விநாயகர் சிலைகளை பொதுவாக ஆறு,  குளம்,கடல் போன்ற நீர் நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம்.


"விசர்ஜனம் "- இதனுடைய தத்துவம் தெரிந்து கொள்ளலாமா?..


இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி ஆகஸ்ட் 27 ஆம் தேதி புதன்கிழமை நேற்று கோலாகலமாக அனைத்து இடங்களிலும் கொண்டாடப்பட்டது. சதுர்த்தி விழாவை முன்னிட்டு களிமண்ணால் பல இடங்களில் களிமண்ணால் சிறிய பிள்ளையார் முதல் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட பிள்ளையார் பிள்ளையார் வரை வீடுகளிலும் மற்றும் வீதிகளிலும் வைத்து வழிபாடு நடைபெற்றது இது மூன்று நாட்கள்,ஐந்து நாட்கள் அல்லது பத்து நாட்கள் வைத்து பூஜை செய்த பின்னர் விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் விசர்ஜனம் செய்கின்றனர்.இதற்கு காரணம் என்ன? இதில் மிகப்பெரிய தத்துவம் அடங்கியுள்ளது." மண்ணில் பிறக்கும் நாம் அனைவரும் இந்த மண்ணுக்கே சொந்தம் ஆவோம்  " என்பதை உணர்த்துகிறது.


வீடுகளில் களிமண்ணால் செய்த சிறிய சிலைகளை பூஜை செய்து கிணறு அல்லது தோட்டத்தில் உள்ள சிறிய குளம் ஆகிய நீர்நிலைகளில் கரைகின்றனர். விசர்ஜனம் நடைபெறும் நாள் அனைவரும் கோலாகலமாக நடனமாடி மேல தாளங்களுடன் நீர்நிலைகளில்  சிலைகளை கரைத்து கொண்டாடி மகிழ்வார்கள்.


விநாயக சதுர்த்தி விழா ஆதிகாலம் முதல் கொண்டாடப்பட்டு வந்திருந்தாலும் அதனை மக்கள் அனைவரும் இணைந்து கொண்டாடும் தேசிய விழாவாக பிரபலப்படுத்தியவர் தேசபக்தரும், தியாகியுமான பால கங்காதர திலகர் தான். 

19 ஆம் நூற்றாண்டில் 1893 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தியை மக்கள் விழாவாக கொண்டாட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து பூனாவில் அமைந்துள்ள தகடு சேத்கணபதி கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா முதல் முதலாக விசேஷமாகவும், சிறப்பாகவும், கோலாகலமாகவும் கொண்டாடப்பட்டது.


ஆடி மாதத்தில் தென்மேற்கு பருவ மழை பெய்து ஆறுகள், நீர்நிலைகளில் வெள்ளம் பெருகி வரும்.இந்த தண்ணீரை சுத்தமாக வேண்டும் என்பதற்காக நீர் நிலைகளில் உள்ள மீன்கள் ஆமைகள் போன்ற உயிரினங்கள் தூய்மை அடைய வேண்டும் என்பதற்காகவும்,ஆவணி மாதம் மஞ்சள் குங்குமம் வைத்து பூஜிக்கப்பட்ட களிமண்ணால் செய்த விநாயகரை நீர் நிலைகளில் கரைத்து வழிபடுகின்றனர். கிருமி நாசினி ஆன மஞ்சள் சிலைகளுடன் சேர்ந்து கரைவதனால் நீர்நிலைகள் சுத்தமாகும்.


விநாயகர் சதுர்த்தி சிறப்புகள் தலைப்பில் வெளியாகும் சுவாரசியமான தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன் எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.