கல்யாணமாகி 45 நாள்தான் ஆச்சு.. கணவர் கதையை முடித்த மனைவி.. காரணம் மாமா!

Su.tha Arivalagan
Jul 03, 2025,11:27 AM IST

பாட்னா: தனது மாமாவுடன் இருந்த கள்ளத் தொடர்பு காரணமாக, தனது கணவரை திருமணமான 45 நாட்களிலேயே கொலை செய்துள்ளார் ஒரு மனைவி.


பீகார் மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில், திருமணம் முடிந்த 45 நாட்களில் 25 வயது இளைஞர் ஒருவர் தனது மனைவியால் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது மேகாலயாவில் நடந்த தேனிலவு கொலை போலவே நடந்துள்ளது.


குஞ்சா தேவி (20 வயது) என்ற பெண்ணுக்கும், அவரது மாமா ஜீவன் சிங் (55 வயது) என்பவருக்கும் இடையே திருமணத்தை மீறிய தொடர்பு இருந்துள்ளது. இந்த நிலையில்,  குஞ்சா தேவிக்கு வீட்டில் திருமணம் நிச்சயம் செய்து பிரியான்ஷு என்பவருடன் கல்யாணம் செய்து வைத்துள்ளனர்.




ஆனால் இந்தக் கல்யாணத்தை குஞ்சா தேவி விரும்பவில்லை. தனது மாமாவையும் விட மனம் இல்லை. இதையடுத்து இருவரும் சேர்ந்து சதி செய்து, கூலிப்படையை தயார் செய்து அவர்களை ஏவி பிரியான்ஷுவைக் கொலை செய்துள்ளனர். தற்போது குஞ்சா தேவியும், கூலிப்படையைச் சேர்ந்த 2 பேரும் கைதாகியுள்ளனர். ஜீவன் சிங் தலைமறைவாகி விட்டார்.


தேவியும் ஜீவன் சிங்கும் காதலித்து வந்ததை குஞ்சாதேவியின் குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால், இரண்டு மாதங்களுக்கு முன்பு தேவிக்கு நயினாகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பர்வான் கிராமத்தைச் சேர்ந்த பிரியான்ஷுவுடன் கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.


ஜூன் 25 அன்று, பிரியான்ஷு தனது சகோதரியை சந்தித்துவிட்டு ரயிலில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். நவி நகர் நிலையத்தை அடைந்ததும், தன்னை அழைத்துச் செல்ல ஒருவரை பைக்கில் அனுப்பும்படி தேவியிடம் கூறியுள்ளார். ரயில் நிலையத்திலிருந்து வீட்டிற்குச் செல்லும் வழியில், இரண்டு பேரால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கி குற்றவாளிகளைத் தேடத் தொடங்கியபோது, தேவி கிராமத்தில் இருந்து தப்பிச் செல்ல முயன்றார். இது பிரியான்ஷுவின் குடும்பத்தினரிடையே சந்தேகத்தை எழுப்பியது.


காவல்துறையினர் தேவியின் செல்போன் பதிவுகளை ஆய்வு செய்தபோது, அவர் தனது மாமாவுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது. மாமாவின் அழைப்புகள், அவர் கூலிப்படையினருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்ததைக் காட்டின. இதையடுத்து கொலையை விசாரிக்க ஒரு சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) அமைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தேவி உள்ளிட்ட 3 பேர் சிக்கினர்.


கடந்த மே மாதம்  மேகாலயாவுக்கு தேனிலவு சென்றபோது, ராஜா ரகுவன்ஷி என்பவரை அவரது மனைவி சோனம் மற்றும் அவரது காதலன் ராஜ் குஷாவாஹா ஆகியோர் கொலை செய்த சம்பவம் நாட்டையே அதிர வைத்திருந்தது.  அதேபோலத்தான் தற்போது பீகாரிலும் இந்தக் கொலை நடந்துள்ளது.