திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மனைவி ரேணுகாதேவி காலமானார்

Su.tha Arivalagan
Aug 19, 2025,12:06 PM IST

சென்னை : முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக பொருளாளருமான டி.ஆர்.பாலுவின் மனைவியும், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் தாயாருமான ரேணுகா தேவி இன்று காலமானார். அவருக்கு வயது 80.


திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சென்னை தெற்கு தொகுதிகளில் இருந்து அதிக முறை மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டு எம்.பி.,யாக இருப்பவர். இவரது மனைவி ரேணுகாதேவி. நீண்ட காலம் காதலித்து இருவரும் மணம் புரிந்தவர்கள். அதன் பிறகு அவரது உறவினரான பொற்கொடியையும் மணந்தார் டி.ஆர்.பாலு.




டி.ஆர்.பாலுவிற்கு 3 மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளனர். டி.ஆர்.பாலு-ரேணுகா தேவி தம்பதியின் மகனான டி.ஆர்.பி.ராஜா, டி.ஆர்.பாலுவின் அரசியல் வாரிசாக அடையாளப்படுத்தப்பட்டு, மன்னார்குடி தொகுதியில் தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்று எம்எல்ஏ.,வாக உள்ளார். இவர் தற்போது அமைச்சராகவும் இருந்து வருகிறார்.


டி.ஆர்.பாலுவின் மனைவி ரேணுகா தேவி, கடந்த 8 மாதங்களாக உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நுரையீரல் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன. மறைந்த ரேணுகா தேவியின் உடலுக்கு திமுக பிரமுகர்கள் பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் ரேணுகா தேவியின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.