நாம் தமிழரை கட்சியைப் போல அமமுகவும் தனித்து போட்டியா?.. 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர் தேர்வு

Su.tha Arivalagan
Dec 02, 2025,11:10 AM IST

சென்னை: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்  பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தைகள் முடிவடையாத நிலையிலேயே, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான 234 தொகுதிகளிலும் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களை அடையாளம் காணும் பணியைத் தொடங்கியுள்ளார். இதற்காக, டிசம்பர் 10 முதல் டிசம்பர் 18 வரை விருப்ப மனுக்களை விநியோகிக்கும் பணியை கட்சி தொடங்கியுள்ளது. 


இது, வேட்பாளர்களைக் கண்டறிந்து, சாதகமான தொகுதிகளை உறுதி செய்வதற்கான ஒரு முன்கூட்டிய தேர்தல் வியூகமாகப் பார்க்கப்படுகிறது.


2017-ல் தினகரனுக்கு ஆதரவாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவரான முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் கூறுகையில், "கூட்டணி முடிவுகளைப் பொருட்படுத்தாமல், தகுதி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களில் எட்டு பேருக்கு வரவிருக்கும் தேர்தலில் நிச்சயம் இடம் ஒதுக்க கட்சிக்குள் முடிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.




மேலும், தினகரன், சாத்தியமான வேட்பாளர்களை உடனடியாக களப்பணியைத் தொடங்கும்படி அறிவுறுத்தியுள்ளார். மேலும் கூட்டணி தொகுதி ஒதுக்கீடு தொடர்பான குழப்பங்கள் இன்னும் தீராத நிலையில் தனது வேலைகளை முன்கூட்டியே தினகரன் தொடங்கி விட்டதாகவும் கருதப்படுகிறது. 


அதேசமயம், நாம் தமிழர் கட்சியைப் போலவே தனிப் பாதையில் நடை போட தினகரன் தீர்மானித்திருக்கிறாரா என்ற கேள்வியும் எழுகிறது. நாம் தமிழர் கட்சி தொடங்கியது முதலே தனித்துதான் போட்டியிட்டு வருகிறது. அதிலும் சரி பாதியாக ஆண், பெண் வேட்பாளர்களை நிறுத்தும் ஒரே கட்சியாகவும் நாம் தமிழர் கட்சி திகழ்கிறது. இந்த தேர்தலிலும் 234 வேட்பாளர்களையும் முடிவு செய்து விட்டார் சீமான். வருகிற பிப்ரவரி மாதம் அத்தனை பேரையும் ஒரே மேடையில் ஏற்றி அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளார்.


இந்த நிலையில் அமமுகவும் நாம் தமிழர் கட்சி பாணியில் தனித்துப் போட்டியிட திட்டமிட்டுள்ளதா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.