இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் போட்டியா? சூசகமாக சொன்ன கே.என்.நேரு

Su.tha Arivalagan
Jun 25, 2026,11:37 AM IST

சென்னை : முதல்வர் விஜய்யின் விமர்சனத்திற்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, நடக்க இருக்கும் இடைத்தேர்தலில் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டியிட உள்ளதை சூசகமாக தெரிவித்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை கூட்டத் தொடரில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின் போது பேசிய தமிழக முதல்வர் விஜய், குட்டி ஸ்டோரி ஒன்றை தெரிவித்தார். திமுக.,வை கிண்டல் செய்வது போல் அவர் சொன்ன அந்த குட்டி ஸ்டோரியில், "ஒரு பெரியவர் எதையே தேடிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு சிறுவன் யாரை தேடுகிறீர்கள் என கேட்டுள்ளான். அதற்கு அவர், இங்கு உங்கள் அப்பா இருப்பதாக சொன்னார்கள். அவரை எங்கே காணோம்" என்றார்.  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக சட்டசபை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போயிட்டு தோல்வி அடைந்ததால் சட்டசபைக்கு வர முடியாமல் போனதை மறைமுகமாக குறிப்பிட்டு முதல்வர் விஜய் இதை பேசினார்.


இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சரும், திமுக முக்கிய நிர்வாகிகளில் ஒருவருமான கே.என்.நேரு, முதல்வர் விஜய் பேசியதை குறிப்பிட்டார். பிறகு, விரைவில் சட்டசபைக்கு வந்து திமுக சட்டசபை தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்பார்" என்றார். 




மு.க.ஸ்டாலின் தற்போது எம்எல்ஏ., கிடையாது என்பதால் அவர் சட்டசபைக்கு வர முடியாது. அப்படியானால் தமிழக சட்டசபை இடைத்தேர்தலில் ஸ்டாலின் போட்டியிட போகிறாரா? அதைத் தான் கே.என்.நேரு முறைமுகமாக கூறி இருக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. காரணம், தமிழகத்தில் தற்போது மொத்தமாக 6 தொகுதிகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் ஒரு தொகுதி முதல்வர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதி. மற்ற 5 ம் அதிமுக.,வில் இருந்து விலகி தவெக.,வில் இணைந்தவர்கள் ராஜினாமா செய்த தாராபுரம், விராலிமலை, மதுராந்தகம், அம்பாசமுத்திரம், பெருந்துறை. 


ஒரு தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட அடுத்த 6 மாதங்களுக்குள் அந்த தொகுதியில் இடைத் தேர்தல் நடத்த வேண்டும் என்பது விதிமுறை. இந்த 6 மாதம் என்பது அதிகபட்ச காலக்கெடுவாகும். அதனால் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் காலியாக உள்ள 6 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படலாம். இடைத்தேர்தல் நடத்தவதற்கான முதல்கட்ட பணிகளை தேர்தல் கமிஷன் ஏற்கனவே துவங்கி விட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் இந்த 6 தொகுதிகளையும் கைப்பற்ற ஆளும் கட்சியான தவெக, திமுக, அதிமுக இடையே கடும் போட்டி நடைபெறும். இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெற்றால் சட்டசபையில் அக்கட்சியின் பலம் அதிகரிக்கும். அதே சமயம் திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் ஏதாவது தொகுதியில் போட்டியிட்டு வென்றால், சட்டசபைக்கு வர வாய்ப்பு ஏற்படும். ஆனால் இடைத்தேர்தல் நடைபெற போகும் 5 இடங்கள் அதிமுக வெற்றி பெற்றது. அதனால் அவற்றை மீண்டும் கைப்பற்றி, தங்கள் பலத்தை தக்க வைக்க அதிமுக.,வும் கடுமையாக முயற்சி செய்யும். இதனால் இடைத்தேர்தல் கடும் போட்டி நிறைந்ததாகவே இருக்கும்.