ஜனவரி + தேர்தல் வரப் போகுது.. பொங்கல் பரிசு என்ன கிடைக்கும்.?.. எதிர்பார்ப்பில் மக்கள்!

Su.tha Arivalagan
Nov 28, 2025,12:54 PM IST

- சுமதி சிவக்குமார்


சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரப் போகும் பொங்கல் குறித்து இப்போதே எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. காரணம், அடுத்த பொங்கலுக்கு கண்டிப்பாக ரொக்கப் பரிசை திமுக அரசு வழங்கும் என்ற எதிர்பார்ப்புதான். 


கடந்த 2021ம் ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது அப்போது இருந்த அதிமுக அரசு பொங்கலுக்கு ரூ. 2500 ரொக்கம் மற்றும் பல்வேறு பொருட்களை பரிசுத் தொகுப்பாக வழங்கியது. ஆனால் பின்னர் வந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக தோற்று திமுக வந்தது. 




திமுக ஆட்சியில் 2022 பொங்கலுக்கு 21 பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு மட்டும் வழங்கப்பட்டது. ஆனால் ரொக்கப் பரிசு வழங்கப்படவில்லை. இருப்பினும் பின்னர் 2023, 2024 வருடங்களில் பரிசுத் தொகுப்புடன், ரூ. 1000 பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது. இதுவே சர்ச்சையானது. ரொக்கப் பரிசை திமுக குறைத்தது தொடர்பாக அதிமுக தொடர்ந்து விமர்சித்து வந்தது.


இந்த நிலையில் அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் வரவுள்ளதால், நிச்சயம், திமுக அரசு  பெரிய அளவிலான ரொக்கப் பரிசைக் கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. காரணம் தேர்தலை மனதில் வைத்து இதை திமுக அரசு செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அரசின் நிதி இருப்பு பெரும் கவலைக்குரியதாகவே உள்ளது.  அரசிடமிருந்து ரூ. 5000 வரை பரிசுத் தொகையாக தரப்படலாம் என்ற பேச்சுக்களை சிலர் கிளப்பி விட்டுள்ளனர். ஆனால் இது சாத்தியமில்லை. காரணம், பல ஆயிரம் கோடி பணம் தேவைப்படும். அதற்கு நிதி நிலைமை இடம் தராது. எனவே அதற்கு வாய்ப்பில்லை.


1000 என்ற நிலையிலிருந்து சற்று உயர்ந்து ரூ. 2000 வரைக்கும் தர வாய்ப்புண்டு. அதுவும் கூட இப்போதைய நிதி நிலையில் கடினமானதுதான். ஆனால் தேர்தல் வருகிறது என்பதாலும், மக்களிடையே எதிர்பார்ப்பை எதிர்க்கட்சிகள் கிளப்பி விட்டு வருவதாலும் ரொக்கப் பரிசு கொடுக்காமல் இருக்கவும் முடியாது என்பதாலும், இந்த அளவுக்கு ரொக்கப் பரிசு கொடுக்க அரசு முடிவு செய்யலாம் என்று தெரிகிறது.


பொறுத்திருந்து பார்ப்போம்.


(சுமதி சிவக்குமார், தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)