திமுகவின் கோட்டைக்குள்ளேயே.. பெரும் கூட்டம்.. விஜய்யைக் காண திரளும் தொண்டர்கள்.. ஓட்டாக மாறுமா?
நாகப்பட்டனம் : போலீஸ், கோர்ட் ஆகியோர் எத்தனை கட்டுப்பாடுகள் விதித்தாலும், கண்டிப்பு காட்டினாலும் அவை அனைத்தையும் மீறி தவெக தலைவர் விஜய்யை காண்பதற்காகவும், அவரது பேச்சை கேட்பதற்காகவும் நாகப்பட்டினம் புத்தூர் ரவுண்டானா பகுதியில் ஆயிரக்கணக்கான திரண்டுள்ளனர். கிட்டத்தட்ட காவல்துறை போட்ட பல விதிமுறைகள் இதில் மீறப்பட்டுள்ளன. காரணம், தன்னெழுச்சியாக வழியெங்கும் மக்கள் கூடி மிகப் பெரிய உற்சாகத்தைக் காட்டியுள்ளனர்.
விஜய்யை மிக சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்று அரசியல் கட்சிகளுக்குக் குறிப்பாக திமுகவுக்கு உணர்த்தும் விதமாக திருச்சி கூட்டம் அமைந்தது. இப்போது நாகையும் கூட அதே உணர்வைத்தான் ஏற்படுத்தியுள்ளது. காவிரி டெல்டாவில் கம்யூனிஸ்டுகள், திமுகவுக்குத்தான் அதிக ஆதரவு இருக்கும். ஆனால் விஜய்க்கு கூடியுள்ள இந்தக் கூட்டம் மிகப் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இத்தனைக்கும் ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை காவல்துறை விதித்துள்ளது. அப்படி விதிக்கப்படாமல் இருந்திருந்தால், திருச்சி பிரமிப்பை மிஞ்சியிருக்கும் நாகை கூட்டம் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு இன்றும் மிகப் பெரிய கூட்டம் கூடி விட்டது.
திருச்சியில் முதல் கட்ட தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணத்தை கடந்த வாரம் மேற்கொண்டார் விஜய். அப்போது அவருக்கு போலீசார் தரப்பில் விதிக்கப்பட்ட மிக முக்கியமான கட்டுப்பாடு, ரோடுஷோ நடத்தக் கூடாது என்பது தான். ஆனால் திருச்சி விமான நிலையத்தில் இருந்தே யாரும் எதிர்பாராத வகையில் ஆயிரக்கணக்கான தொண்டர்களும், பொது மக்களும் சாலையின் இரு புறமும் குவிந்ததால் 20 முதல் 30 நிமிடங்களில் அடையக் கூடிய திருச்சி விமான நிலையத்தில் இருந்து மரக்கடை மார்க்கெட் வரையிலான தூரத்தை விஜய் தனது பிரச்சார வேனில் அடைவதற்கு 5 மணி நேரம் ஆனது. விமான நிலையத்தில் இருந்து, பிரச்சாரத்திற்கு அனமதிக்கப்பட்ட பகுதிக்கு வந்து சேருவதே ஒரு ரோடுஷோ போல மாறியது.
அதற்கு பிறகு இரண்டாம் கட்ட பிரச்சார பயணத்திற்காக நாகை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தவெக.,வினர் அனுமதி கேட்டு அளித்த மனுவிற்கு ஏராளமான கட்டுப்பாடுகள் போலீசார் தரப்பில் விதிக்கப்பட்டதால் அவற்றை எதிர்த்து தவெக.,வினர் கோர்ட்டை நாடினர். கோர்ட்டும் அரசு தரப்பு வாதங்களை ஏற்று மரங்கள், மின் கம்பங்களில் தொண்டர்கள் ஏறக் கூடாது, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர கால வாகனங்கள் செல்வதற்கு வழி அமைத்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை தவெக.,விற்கு விதித்தது. வாகனங்களில் யாரையும் அழைத்து வரக் கூடாது என சொல்லப்பட்டிருந்தாலும், தங்களின் சொந்த செலவில் பலரும் புறப்பட்ட வந்துள்ளது மிகப் பெரிய ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.
விஜய்யின் வாகனத்தை யாரும் பின் தொடர கூடாது, குழந்தைகளை அழைத்து வரக் கூடாது என்பது உள்ளிட்ட 20 கட்டுப்பாடுகளை விதித்து தான் விஜய்க்கு நாகை புத்தூர் ரவுண்டானா அண்ணா சிலை அருகே பிரச்சாரம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் விஜய் பிரச்சாரம் செய்ய உள்ள புத்தூர் ரவுண்டானா பகுதியில் அதிகாலை முதலே மரங்கள், பெரிய கட்டிடங்களின் மொட்டை மாடிகள் உள்ளிட்ட உயரமான பகுதிகளில் ஏறி நின்று காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதே போல் விஜய் வரும் பாதையில் கலை நிகழ்ச்சி நடத்தக் கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்ட போதிலும் கரக்காட்டம் வைத்து விஜய்க்கு வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் மட்டுமல்ல விஜய்யே சொன்னாலும் கேட்காத ரீதியில் தான் தொண்டர்கள் பாசத்தை காட்டி வருகிறார்கள்.
எம்ஜிஆர், விஜய்காந்திற்கு பிறகு விஜய்க்கு மட்டுமே இந்த அளவிற்கு எழுச்சியுடன் பெரிய அளவில் மக்கள் கூட்டம் செல்லும் இடங்களில் எல்லாம் திரண்டு வருவது மற்ற அரசியல் கட்சிகளை மட்டுமல்ல தமிழக மக்களையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. இந்த கூட்டம் அனைத்தும் ஓட்டுக்களாக மாறாது என மற்ற அரசியல் கட்சிகள் சொல்லி வருகின்றன.
எந்த நம்பிக்கையில் அவர்கள் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் ஒரு வேளை இது இந்த கூட்டத்தில் பாதி ஓட்டாக மாறினாலும் கூட அது தமிழக அரசியலிலும், தேர்தல் களத்திலும் மிகப் பெரிய எழுச்சியை, திருப்பத்தை ஏற்படுத்தும் என்பதை மறுக்க முடியாது.