அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது.. விஜய்யை மறைமுகமாக சுட்டுகிறாரா ரஜினிகாந்த்?

Su.tha Arivalagan
Jul 12, 2025,05:24 PM IST

சென்னை: அனுபவசாலிகள் இல்லாத எந்த ஒரு கட்சியும் அல்லது இயக்கமும் வெற்றி பெறாது என்று கூறி மீண்டும் ஒரு சலசல்பை ஏற்படுத்தியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.


விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியைத்தான் அவர் மறைமுகமாக இவ்வாறு சுட்டிக் காட்டிப் பேசியுள்ளாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. கமல்ஹாசனுக்கும் முன்பாக அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டவர் ரஜினிகாந்த். அரசியலுக்கு வரப் போவதாகவும் கூட அவர் அறிவித்தார். ஆனால் திடீரென அதிலிருந்து பின்வாங்கி விட்டார். கொரோனாவைக் காரணம் காட்டி அவர் அரசியலுக்கு குட்பை சொல்லி விட்டார்.


அதன் பின்னர் கமல்ஹாசன் யாரும் எதிர்பாராத வகையில் அரசியலுக்கு வந்தார். இப்போது நடிகர் விஜய்யும் அரசியலில் குதித்துள்ளார். கமல்ஹாசனின் அரசியல் தற்போது டல்லாகி விட்டது. விஜய் டேக் ஆப் ஆகியுள்ளார். வருகிற 2026 சட்டசபைத் தேர்தலில் அவரது செல்வாக்கு என்னவென்று தெரிய வரும்.


இந்த நிலையில் விஜய்யை அவரது எதிர்ப்பாளர்களாக கருதப்படும் கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பல நேரங்களில் தனிப்பட்ட முறையிலும் தாக்கிப் பேசுகிறார்கள். ஆனால் விஜய் இதுவரை எந்த ரியாக்ஷனும் காட்டவில்லை. மக்கள் பிரச்சினைகளை மட்டும் சுட்டிக் காட்டி வருகிறார். விரைவில் 2வது மாநில மாநாட்டை நடத்த விஜய் தயாராகி வருகிறார். தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவும் அவர் ஆயத்தமாகிறார். அதன் பின்னர்தான் அவரது அரசியல் முழு வீச்சை அடையும் என்று தெரிகிறது.




இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார். எந்த மேடையில் சில மாதங்களுக்கு முன்பு தனது பேச்சால் ஒரு சலசலப்பை ஏற்படுத்தினாரோ அதே மேடையில்தான் மீண்டும் ஒரு விவாதத்தை கிளப்பி விட்டுப் போயுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு அமைச்சர் எ வ வேலுவின் புத்தக வெளியீட்டு விழா நடந்தது. அதில் கலந்து கொண்டு பேசிய ரஜினிகாந்த், மூத்த அரசியல் தலைவரும், மூத்த அமைச்சருமான துரைமுருகன் குறித்துப் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்கு துரைமுருகனும் பதிலடி கொடுத்து கருத்து தெரிவித்திருந்தார்.


இந்த நிலையில் இந்த சர்ச்சையைச் சுட்டிக் காட்டி நேற்று நடந்த வேள்பாரி புத்தகம் 1 லட்சம் பிரதிகளை கடந்து விற்பனையானதையொட்டி நடந்த நிகழ்வில் பேசினார் ரஜினிகாந்த். அவர் பேசுகையில், சில மாதங்களுக்கு முன்பு இதே மேடையில் நான் பேசிய பேச்சு சர்ச்சையானது. சீனியர் ஸ்டூடண்ட்ஸ் பற்றி நான் பேசியிருந்தேன். அந்தப் பேச்சின்போது, எந்த ஒரு இயக்கத்திற்கும், எந்த ஒரு கட்சிக்கும் தூண்கள் என்பவர்கள் அனுபவசாலிகள் தான். அனுபவசாலிகள் இல்லாமல் எந்த இயக்கமும், கட்சியும் தேறாது என்று சொல்லி முடிக்கவிருந்தேன். ஆனால் கூட்டத்தில் கிடைத்த கைத்தட்டலைப் பார்த்து நான் பேச வந்ததை மறந்து விட்டேன்.


ஆனால் இப்போது நான் சுதாரிப்பாக இருக்கிறேன். இப்போதும் கூட சிவக்குமார், கமல்ஹாசன் போன்றவர்களைக் கூப்பிடாமல், கூலிங் கிளாஸ் போட்டு ஸ்லோமோஷனில் நடக்கும் என்னைக் கூப்பிட்டிருக்கிறார்களே. கவனமா இருக்கணும் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன் என்றார் ரஜினிகாந்த்.


தொடர்ந்து ரஜினிகாந்த் பேசும்போது,  தமிழக மக்கள் சாதி, மதம், மொழி ஆகியவற்றைத் தாண்டி கலையை கொண்டாடும் சிறப்பு மிக்கவர்கள். அதில் அவர்கள் மன்னர்கள். அவர்களது கால்களை தொட்டு வணங்குகிறேன் என்றார் ரஜினிகாந்த்.


ரஜினிகாந்தின் இந்த அரசியல் கருத்துகள், தமிழக அரசியல் வட்டாரத்தில் பல்வேறு யூகங்களை எழுப்பியுள்ளன. குறிப்பாக, அரசியலில் புதிதாகக் களமிறங்கியுள்ள சில கட்சிகளை மறைமுகமாக அவர் விமர்சிப்பதாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ள நடிகர் விஜய் போன்ற புதுமுகங்களைச் சுட்டிக்காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 


அரசியலில் அனுபவத்தின் முக்கியத்துவத்தை ரஜினிகாந்த் இதன் மூலம் வலியுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் அனுபவம் என்பது எப்படி வரும் என்பதை ரஜினிகாந்த் விளக்கவில்லை.. களத்தில் இறங்கும்போதுதானே அனுபவம் கிடைக்கும். களத்தில் இறங்காமல், அனுபவம் உள்ளவர்களை மட்டுமே கூட வைத்துக் கொண்டால் மட்டும் எப்படி வெற்றி பெற முடியும்.. ரஜினிகாந்த் களத்தில் இறங்கத் தயங்கியவர், பின்வாங்கி சென்றவர். அவர் எப்படி அனுபவம் இல்லாதவர்கள் என்று புதியவர்களை சொல்லலாம் என்று விஜய் ஆதரவாளர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.


ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் தனது முடிவை மாற்றி, கட்சி தொடங்கும் எண்ணத்தைக் கைவிட்டார். இருப்பினும், அவரது அரசியல் தொடர்பான கருத்துகள் அவ்வப்போது விவாதப் பொருளாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்ககது.