இன்ஸ்டா ரீல்ஸால் மகள் கண் முன்னே பறிபோன தாயின் உயிர்..வைரலாகும் வீடியோ..!
டேராடூன்: இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக கங்கை ஆற்றில் இறங்கிய பெண், தனது குழந்தையின் கண் முன்னே தவறி விழுந்து அடித்து செல்லப்பட்ட சம்பவம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
ஆபத்தான முறையில் விபரீத ரீல்ஸ்களை எடுக்க வேண்டாம் என்று ஒவ்வொரு முறையும் பரிந்துரைக்கப்பட்டு வருகிறது. ஆனால் இன்றைய இளம் தலைமுறையினர் எதைப்பற்றியும் யோசிக்காமல் விபரீத விளையாட்டுகளை கையில் எடுக்கின்றனர். அதாவது ஆபத்தான இடங்களான சிகரங்கள், மலை உச்சியில் இருந்து வீடியோ எடுக்கும் போது தவறி விழுந்து உயிரிழப்பு ஏற்படுகிறது. அதன்படி, சமீபத்தில்
மகாராஷ்டிர மாநிலம் கும்பே அருவிக்கு சுற்றுலா சென்ற இன்ஸ்டாகிராம் பிரபலம் அன்வி காம்தார் ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருக்கும் போது 300 அடி பள்ளத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். இச்சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அந்த வகையில் தற்போது உத்தரகாண்ட் மாநிலத்தில் மீண்டும் ஒரு விபரீதம் நிகழ்ந்துள்ளது. அதாவது கடந்த திங்கட்கிழமை நேபாளத்தைச் சேர்ந்த 35 வயதுமிக்க பெண் ஒருவர் விடுமுறை நாட்களை கழிப்பதற்காக தனது 11வயது மகளுடன் உத்தரகாண்ட் மாநிலம், உத்தரகாசியில் உள்ள உறவினர்களை பார்க்கச் சென்றுள்ளார். அன்று அம்மா-மகள் இருவரும் கங்கையின் துணை நதியான பாகீரதி ஆற்றிங் கரையில் உள்ள மணிகர்ணிகா காட் பகுதிக்குச் சென்றிருந்தனர்.
அங்கு அந்தப் பெண் ரீல்ஸ் எடுக்க முயன்று, தனது மகளிடம் மொபைலை கொடுத்து வீடியோ எடுக்குமாறு கூறிவிட்டு ஆற்றில் இறங்கினார்.
அப்போது நீரில் இறங்கி மகளைப் பார்த்து சிரித்தபடி அந்தப் பெண் நிற்க திடீரென ஆர்ப்பரித்து வந்த ஆற்றுநீர் அடித்துச் சென்றது. இதைப் பார்த்த மகள் அம்மா அம்மா என்று கதறி அழுதுள்ளார். இதைக்கேட்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக விரைந்து வந்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து அந்தப் பெண்ணை மீட்க தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தீவிர படுத்தப்பட்டது. ஆனால் இதுவரை இன்னும் உயிரிழந்த பெண்ணின் உடலை கைப்பற்ற முடியவில்லை.
இந்த நிலையில் இன்ஸ்டா ரீல் எடுப்பதற்காக மகள் கண்முன்னே அம்மா அடித்துச் செல்லப்பட்ட வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த துயரச் சம்பவம் காண்போரை கண்கலங்க செய்துள்ளது.