ஆற்றலை சேமிப்போம் உலகை பாதுகாப்போம்.. World Energy Efficiency Day

Su.tha Arivalagan
Mar 05, 2026,02:54 PM IST

- மயிலாடுதுறை வீ.யோகாஸ்ரீ 


உலக ஆற்றல் திறன் தினம் ஒவ்வொரு  ஆண்டும் மார்ச் 5 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த தினம் முதன்முதலில் 1998 ஆம் ஆண்டு ஆஸ்திரியாவின் Vienna நகரில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டின் பின்னர் தொடங்கப்பட்டது.


ஆற்றலை சிக்கனமாகவும் பயனுள்ளதாகவும் பயன்படுத்துவதின் அவசியத்தை உணர்த்துவதற்காக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.




தேவையற்ற மின்சார பயன்பாட்டை குறைப்பது இந்த தினத்தின் முக்கிய குறிக்கோள் ஆகும். மின்விளக்குகளை LED விளக்குகளாக மாற்றுவது ஆற்றல் சேமிப்பில் உதவுகிறது. சூரிய சக்தி, காற்றாலை சக்தி போன்ற மாற்று ஆற்றல் மூலங்களை பயன்படுத்த ஊக்குவிக்கிறது.


சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும், காற்று மாசுபாட்டை குறைப்பதற்கும் உதவுகிறது. ஆற்றல் திறன் அதிகரிப்பு மூலம் செலவைக் குறைக்கலாம்.


வீடுகள், பள்ளிகள், தொழிற்சாலைகள் ஆகிய இடங்களில் ஆற்றல் சேமிப்பு முறைகள் பின்பற்ற நாம் செய்ய வேண்டியவை:


பயன்படுத்தாத மின் சாதனங்களை அணைத்து வைப்பது நல்ல பழக்கமாகும். நம் வீடுகள் அல்லது பொது இடங்களில் தேவையில்லாமல் மின்விளக்கு, மின்விசிறி போன்ற மின் சாதனங்களை நாம் கட்டாயம் அணைத்து வைக்க வேண்டும் .


எந்த இடத்திலும் தண்ணீர் குழாய் கசிந்து கொண்டோ அல்லது திறந்து இருந்தாலோ நாம் அவற்றை கட்டாயம் மூடி வைக்க வேண்டும். தண்ணீரையும் வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.




பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவது எரிபொருள் சேமிப்புக்கு உதவும் என்பதை அறிந்து மிகவும் முக்கியமாக செல்லும் பொழுது கார் போன்றவற்றை பயன்படுத்தி மற்ற நேரங்களில் பொது போக்குவரத்தை பயன்படுத்துவது நல்லது.


மரக்கன்றுகள் நடுவது மற்றும் பசுமை பாதுகாப்பு நடவடிக்கைகள் முக்கியம் என்பதை உணர்ந்து வீடுகளிலும் பொது இடங்களிலும் மரக்கன்றுகளை நட்டு வளர்ப்போம்.


நம்மிடம் கிடைக்கும் விதைகளை சேகரித்து அவற்றை விதைப்பந்துகளாக மாற்றி வெளியில் செல்லும்போது ஆற்றின் ஓரத்திலும் குளத்தின் ஓரத்திலும் தூக்கி எறிந்தால் அவற்றில் இருந்து கூட மரம் வளரும் என்பதை உணர வேண்டும்.


உலகளவில் ஆற்றல் வளங்கள் குறைந்து கொண்டிருப்பதை அறிந்து மாணவர்களுக்கு ஆற்றல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களை பல்வேறு ஆற்றல்களை சேமிக்க பழக வேண்டும்.