தஞ்சை பெரிய கோவிலில் பிரம்மாண்ட கோ-பூஜை: 108 பசுக்களுக்கு வழிபாடு!

Meenakshi
Jan 16, 2026,05:27 PM IST

தஞ்சாவூர்: மாட்டுப் பொங்கலை முன்னிட்டு, உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில் 108 பசுமாடுகளுக்கு மங்கள இசை முழங்க  கோ-பூஜை மிகச் சிறப்பாக நடைபெற்றது.


ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் அன்று தஞ்சை பெரிய கோவிலில் நந்தி எம்பெருமானுக்கும், பசுக்களுக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு 108 பசுக்களுக்கு ஒரே இடத்தில் வைத்து வழிபாடு செய்யப்பட்டது.


தஞ்சை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்ட 108 பசுக்களும், கன்றுகளும் வரிசையாக நிறுத்தப்பட்டன. பசுக்களுக்குப் புத்தாடை அணிவிக்கப்பட்டு, கொம்புகளுக்கு வர்ணம் பூசப்பட்டு, சந்தனம், குங்குமம் மற்றும் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.




வேத மந்திரங்கள் முழங்க, பசுக்களுக்குப் பழங்கள், அகத்திக்கீரை மற்றும் சர்க்கரைப் பொங்கல் நெய்வேத்தியமாக வழங்கப்பட்டன. பின்னர், மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு வழிபாடு நடைபெற்றது. இந்தத் திருவிழாவைக் காண உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் திரளாகக் கலந்து கொண்டு பசுக்களுக்கு உணவளித்து வணங்கினர்.


கோ-பூஜையைத் தொடர்ந்து, கோவிலில் உள்ள பிரம்மாண்ட நந்தி எம்பெருமானுக்கு 2 ஆயிரம் கிலோ காய்கறிகள், கனிகள், இனிப்புகள் மற்றும் மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. உலகிலுள்ள அனைத்து உயிர்களுக்கும் உணவளிக்கும் இறைவனுக்கு, இயற்கையின் கொடையான விளைச்சலை நன்றியுடன் சமர்ப்பிப்பதே இந்த அலங்காரத்தின் நோக்கம். வழிபாடு முடிந்தவுடன், அலங்காரத்திற்குப் பயன்படுத்தப்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்கள் அனைத்தும் அங்கிருந்த பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டன.