கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
சென்னை: அதிமுக தலைமையிலான கூட்டணி குறித்த முடிவெடுக்கும் அதிகாரம் எடப்பாடி பழனிச்சாமிக்கே உள்ளிட்ட 16 தீர்மானங்கள் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில், இன்று அதிமுக செயற்குழு, பொதுக்கு கூட்டம் நடைபெற்றது. சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இந்த கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் பங்கேற்கவில்லை. இதன்காரணமாக தற்காலிக அவைத் தலைவராக கேபி முனுசாமி நியமனம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அதிமுக பொதுக்குழுவின் முதல் 8 தீர்மானங்களை வாசித்தார். தொடர்ந்து முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் 8 தீர்மானங்களை வாசித்தார்.
அதிமுக கூட்டணியில் இடம்பெறும் கட்சி குறித்து முடிவெடுக்கும் முழு அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும். கோவைக்கும், மதுரைக்கும் மெட்ரோ ரயில் திட்ட ஒப்புதலை முறையாக, சரியாக, போதிய புள்ளி விவரங்களை அனுப்பாத திமுக அரசுக்கு கண்டனம்.
சேலம், கோவை, மதுரை ஆகிய மாநகரங்களில் பஸ் போர்ட் அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழையின் போது, தொடர் மழை, கனமழை, வெள்ளம், புயல் காற்று போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்படும் போதும், இயற்கை பேரிடரை பாதுகாப்பாக எதிர்கொள்ளவும், மக்களை பாதுகாப்பதிலும் திமுக அரசு தொடர்ந்து தோல்வியடைந்து வருகிறது.
சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை கழகம் வரவேற்கிறது.
நெல்லின் ஈரப்பதத்தை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்துவதற்கு, மத்திய அரசின் ஆணையை பெற திமுக அரசை பொதுக்கு கேட்டுக் கொள்கிறது.
அந்நிய முதலீட்டில் ஆமை வேகம், குறையும் முதலீடுகள், இடம்பெயரும் தொழில் நிறுவனங்கள், தமிழக இளைஞர்களுக்கு எட்டாக் கனியாக வேலைவாய்ப்புகள். எனவே போலி புள்ளி விவரங்களை அள்ளி வீசும் பொம்மை முதலமைச்சருக்கு கண்டனம்.
தமிழகத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளாக சிறுமிகள், இளம் பெண்கள் முதல் வயதான பெண்கள் வரை அனைத்து தரப்பு பெண்களுக்கும் பாதுகாப்பில்லாத சூழ்நிலை இருந்து வருவது வேதனை அளிக்கும் நிகழ்வு.
தமிழக மக்களை தொடர்ந்து கடனாளிகள் ஆக்கும் நிர்வாகத் திறனற்ற திமுக ஃபெயிலியர் மாடல் அரசுக்கு கண்டனம்.
சட்டம் ஒழுங்கு சரிந்து கிடக்கிறது. பாதுகாப்பற்ற நிலையில் தமிழகத்தை வைத்திருக்கும் நிர்வாக திறனற்ற போலி திராவிட மாடல் திமுக அரசுக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடும் கண்டனம்.
நீட் தேர்வு ரத்து, பழைய ஓய்வூதிய திட்டம், 100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துதல், பெட்ரோல் டீசல் விலை குறைப்பு போன்ற வாக்குறுதிகள் கிடப்பில் போட்டு அனைத்து தரப்பு மக்களையும் ஏமாற்றும் திமுக அரசுக்கு கண்டனம்.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் செயல்பட்டு, எடப்பாடி பழனிசாமி அவர்களை 2026ல் மீண்டும் முதலமைச்சர் ஆக்குவோம் என சூளுரை ஏற்போம் உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.