2025 ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசு.. 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது
ஸ்டாக்ஹோம்: 2025ம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசை வெல்வோரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மின்னணு சுற்றுகளில் பெரிய அளவிலான குவாண்டம் இயக்கவியல் சுரங்கப்பாதை (macroscopic quantum mechanical tunnelling) மற்றும் ஆற்றல் குவாண்டமாக்கல் (energy quantisation) ஆகியவற்றைக் கண்டுபிடித்ததற்காக, கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஜான் கிளார்க், யேல் பல்கலைக்கழகம் மற்றும் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் மிஷெல் எச். டெவோரெட், மற்றும் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஜான் எம். மார்டினிஸ் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. .
இதுதொடர்பாக இந்தப் பரிசை வழங்கும் ஸ்வீடன் அரசின் அறிவியல் அகாடமி இதுகுறித்து கூறுகையில், "இயற்பியலில் ஒரு முக்கிய கேள்வி என்னவென்றால், குவாண்டம் இயக்கவியல் விளைவுகளைக் காட்டக்கூடிய ஒரு அமைப்பின் அதிகபட்ச அளவு என்ன?" என்பதுதான். இந்த பரிசு பெற்றவர்களின் சோதனைகள், இதுபோன்ற விளைவுகள் அணு அல்லது துணை அணு அளவில் மட்டும் இல்லை என்பதை நிரூபித்துள்ளன.
1984 மற்றும் 1985 ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட தொடர் சோதனைகளில், கிளார்க், டெவோரெட் மற்றும் மார்டினிஸ் ஆகியோர் சூப்பர் கண்டக்டர்கள் (superconductors) எனப்படும் மிகக் குறைந்த மின்தடை கொண்ட பொருட்களைப் பயன்படுத்தி ஒரு மின்னணு சுற்றை உருவாக்கினர். இந்த சுற்றுகள், ஒரு மெல்லிய கடத்தாப் பொருளால் பிரிக்கப்பட்டிருந்தன. இது ஜோசப்சன் சந்திப்பு (Josephson junction) என அழைக்கப்படுகிறது. இந்தச் சுற்று வழியாக மின்சாரம் பாய்ந்தபோது, அதில் உள்ள அனைத்து மின்னூட்டத் துகள்களும் ஒரே துகளாகச் செயல்பட்டு, முழு அமைப்பையும் நிரப்புவது போல் அளவீடுகள் காட்டின. இது குவாண்டம் இயற்பியலின் ஒரு வியக்கத்தக்க வெளிப்பாடாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நோபல் பரிசுகள் ஒவ்வொன்றாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. நேற்று மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இன்று இயற்பியல் பரிசு அறிவிப்பைத் தொடர்ந்து, புதன்கிழமை வேதியியல் நோபல், வியாழக்கிழமை இலக்கிய நோபல், மற்றும் வெள்ளிக்கிழமை மிகவும் எதிர்பார்க்கப்படும் நோபல் அமைதிப் பரிசு அறிவிக்கப்படும். அக்டோபர் 13 ஆம் தேதி, நோபல் நினைவுப் பொருளாதார அறிவியல் பரிசுடன் இந்த ஆண்டுக்கான அறிவிப்புகள் நிறைவடையும்.
மேரி இ. ப்ரூன்கோவ், ஃபிரெட் ராம்ஸ்டெல் மற்றும் டாக்டர் ஷிமோன் சகுச்சி ஆகியோர், நோய் எதிர்ப்பு மண்டலம் தீங்கு விளைவிக்கும் அயல் உயிரினங்களுக்கும் உடலின் சொந்த செல்களுக்கும் இடையே எவ்வாறு வேறுபடுத்துகிறது என்பதை விளக்கியதற்காக மருத்துவத்திற்கான நோபல் பரிசைப் பெறுகிறார்கள்.
பரிசு வென்றவர்களுக்கு தங்கப் பதக்கம், ஒரு பட்டயச் சான்றிதழ் மற்றும் 11 மில்லியன் ஸ்வீடிஷ் குரோனா (சுமார் 10 லட்சம்அமெரிக்க டாலர்கள்) வழங்கப்படும். ஆல்ஃபிரட் நோபலின் நினைவாக இந்த நோபல் பரிசு வழங்கப்படுகிறது. 1896 ஆம் டிசம்பர் 10ம் தேதி அவர் மரணமடைந்தார். இதன் நினைவாக வருகிற டிசம்பர் 10 ஆம் தேதி ஸ்டாக்ஹோமில் நடைபெறும் ஒரு விழாவில் மன்னர் கார்ல் XVI குஸ்டாஃப் இந்த பரிசுகளை வழங்குவார்.