பெற்று வளர்த்த தாய்மடி

Su.tha Arivalagan
Nov 13, 2025,04:30 PM IST

- கு.ரத்னா செந்தில்குமார்


பெற்று வளர்த்த தாய்மடி 

நோயினால் இங்கே வேகுதடி

அருகில் சென்று பார்க்க முடியவில்லை 

ஏனோ என் மனம் இங்கே இருக்க முடியவில்லை 

தந்தை இல்லாமல் தனி ஆளாய் 

பாலூட்டி சீராட்டி வளர்த்தால் 

அவளுக்கு பாலூட்ட என்னால் முடியவில்லை

துன்பத்திலும் சுகமாய் காத்தாள் 

துன்பம் தெரியாமல் வளர்த்தாள் 

கல்வியின் பெருமையை உணரச் செய்தாள் 

கல்விக்காக கல்லுடைத்து பாடுபட்டாள் 

என் மகள் பட்டதாரி என்று பெருமைப்பட்டாள் 

என்னுடைய உயர் படிப்பிற்காக ஓடோடி உழைத்தாள் 

அயல்நாட்டில் படிக்க வைத்தாள் 

தன் மகள் அயல்நாட்டில் வாழ வேண்டும் என்று 

அயல்நாட்டு மாப்பிள்ளையை கட்டி வைத்தாள் 

இன்று நோய்வாயில் படுத்தாள் 

சென்று பார்க்க முடியாத சூழலை கொடுத்துவிட்டாள் 




வயதின் மூப்பு அதனால் வந்தது 

வலியின் வார்ப்பு இன்றோ நாளையோ செய்தி எனக்கு

தாயைப் பார்க்கத் துடிக்கிறேன் 

எனக்கு பாலூட்டிய தாயின் வாயில் நான் பாலூட்ட துடிக்கிறேன் 

அரக்கப்பறக்க கிளம்புகிறேன் 

அம்மாவை 

மூச்சுக்காற்றுடன் பார்ப்பதற்காக 

விமான நிலையம் வந்து விட்டேன் 

கைபேசி அழைத்தது  

கை நடுங்க எடுத்தேன் 

அம்மாவின் ஆவி பிரிந்தது என்று 

செய்தி காற்றில் எதிரொலிக்கிறது

ஆகாயத்தில் பறக்கிறேன் 

ஜன்னல் வழியாக பார்க்கிறேன் 

அம்மாவின் ஆன்மா காற்றில் 

என்னைத் தேடி மட்டுமே வரும் என்று உடம்பு சிலிர்க்கிறது 

மேகங்கள் நகர்கிறது 

என் தாயின் உருவம் தெரிகிறது

தன் நிலை மறந்து 

என் கண்களில் கண்ணீர் பெருகுகிறது 

அயல்நாட்டில் இருந்ததால் உன் அருகில் வர முடியாமல்

உன் ஸ்பரிசத்தை கடைசி நேரத்தில் காண முடியாமல் 

அனாதையாய் நிற்கிறேன் அம்மா 

ஏனென்றால்

விமானத்தில் பறக்கும் வசதி இருந்தும்...

தாயின் பக்கத்திலே இருக்கும் ஏழைக்கு கிடைத்த சுகம் 

எனக்கு கிடைக்கவில்லையே என்று..!


(கு. ரத்னா செந்தில்குமார், தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு தமிழ்ச்சங்கம்  மற்றும் மை பாரத் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ், 

இயக்குனர், திருவண்ணாமலை)