பள்ளித் தேர்வு!

Su.tha Arivalagan
Mar 02, 2026,01:48 PM IST

- எம்.கே. திருப்பதி


வருங்காலத் தூண்களே 

வாருங்கள் எழுதலாம் 

வரவேற்கிறது உங்களை 

வசந்தகால சாலைகள் 


படிப்பு உங்கள்

பாதைகளைத் திறக்கட்டும் 

தேர்வுகள் உங்கள்

தேவைகளை நிறைக்கட்டும் 




கல்வியை உங்கள்

கச்சாப் பொருளாய் கொண்டு 

அறிவுப் பொருட்களை 

ஆசிரிய ஆலைகளில்

அதிகளவில் செய்யலாம்  


மனச்சோர்வு நீக்கி 

தினத்தேர்வு தீட்டுங்கள் 

கண்மணிகாள் 

வெண்மைத் தாளில் 

வெற்றியை காட்டுங்கள் 


எழுதுவது தேர்வல்ல

எண்ணங்கள்

வருங்கால வாழ்வின்

வண்ணங்கள் 


மருத்துவன் : மக்களை

திருத்துவன்! 

அறிவியலாளன் :

ஆட்சியன் : ஆசிரியன்!


வழக்கறிஞர்:

நிலக்கலைஞர் :

நீரில் நிபுணன்:

போரியல் முதல்வன்!


நியாயம் நல்கும்

நீதிபதி:

விரியுரை விரிக்கும்

வித்யாபதி!


இன்னும் இப்படி

எத்தனை எத்தனையோ 

வடிவங்களாக...

மடைமாற்றம் கண்டு

மாலையிட காத்திருக்கிறது 

வினாக்களும் விடைகளும்!


தேர்தல் மனையைவிட

தேர்வுமனை  

தீட்சண்யமானது 

அறிவுத் தொழிற்சாலைகளின் 

ஆழ அகலங்கள் 

ஆச்சரியமானது!


கற்றறிந்ததை 

வெற்றுத்தாள்களில் - கழனிகளில் 

நாற்றுகளாய் 

நட்டு வையுங்கள்

நட்டபயிர் நற்பயிராகி 

நாளும் உய்யுங்கள்! 


வரும் வசந்தங்களுக்கு

வணக்கம் வைக்க 

காத்துக் கிடக்கின்றன

கல்லூரி வளாகங்கள் 


நெஞ்சு நிறைவோடு 

மஞ்சள் நிறத்தோடு 

மடிகொள்ள மயக்கமுறுகிறது 

கல்லூரி வாகனங்கள்!


(எழுத்தாளர் எம்.கே. திருப்பதி.. திருப்பூரைச் சேர்ந்தவர். நூல் படிப்பதில் ஆர்வம். அதன் நீட்சியாக கொஞ்சம் கொஞ்சம் எழுத்துப்பணி.  98 ஆம் ஆண்டிலேயே 4 சிறுகதை, கவிதைகள், துணுக்குகள் பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது. திருச்சி ஆல் இந்தியா வானொலி நிலையத்தில் கவிதை வாசித்திருக்கிறார். காவியக் கவிஞர் வாலி. கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமாரின் தீவிர ரசிகன். திருவண்ணாமலை தடங்கள் பதிக்கும் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தில் நடந்த பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)