வயலுக்கா விழலுக்கா அறியாத போதும்.. பெய்கின்றது மழை!
Mar 21, 2026,03:32 PM IST
- இரா.மும்தாஜ் பேகம்
தமக்கென முயலா நோன்தாள்,
பிறர்க்கென முயலுனர்.
வயலுக்கா விழலுக்கா அறியாத போதும்
பெய்கின்றது மழை.
மணத்திற்கா, பிணத்திற்கா அறியாத போதும்
மலர்கின்றன மலர்கள்.
ஏழைக்கா, எஜமானனுக்கா,
அறியாத போதும் வீசுகின்றது காற்று.
இன்பமா, துன்பமா?
அறியாத போதும் துடிக்கின்றது இதயம்...
குருதியை பாலாக்கிக் கொடுத்திடும் பசு
இருளினை நீக்கிட இலகிடும் மெழுகு.
பசியினை போக்கிட பழம் தரும் சோலை மா.
உலகம் உய்ய உணவளிக்கும் நிலமகள்.
பலனை எதிர்பாராமல் உதவி செய்பவர்
மழையைப் போன்ற மாமனிதர்.
இல்லை என்றிருப்பவர் வாழ்வில்
ஒளிவிடும் சுடரை போன்ற புனிதர்.
உழைத்துச் சேர்த்த பொருட்களின் மிகுதி
வறியவர்க் களிப்பர்.
கொடுத்து மகிழ்வதில் கிடைக்கும் இன்பம் வேறெ திலும் கிடைக்காதே...
(இரா. மும்தாஜ் பேகம், திருச்சி)