பணிச்சுவை!
- கவிதா உடையப்பன்
மானுடப் பிறப்பே!
உன்னை தியாகம் செய்து பணத்தை ஈட்டுகிறாய்,
பிறகு பணத்தை தியாகம் செய்து உன்னை மீட்டெடுக்கிறாய்.
எதிர்காலத்திற்காக கோட்டை கட்டுகிறாய்,
நிகழ்காலத்தின் எழிலை கோட்டை விடுகிறாய்.
பணியிலே உன்னை துளைக்கிறாய்,
பருவத்தின் இனிமையை இழக்கிறாய்.
"பணி என்றால் பாரமா? அல்லவே.
புரிந்தால், வாழ்க்கை சிறக்கும் அபாரம்."
ஒவ்வொரு நாளும் புது பாடம்,
ஒவ்வொரு சவாலும் தரும் புதிய வேடம்.
கடமையிலும் கலை இருக்கிறது,
அதைக் காணும் கண் - மனக்கசப்பை வெல்லுகிறது.
தொழிலை நேசி, நிறுவனத்தை அல்ல.
"உன்னிறுவனம் என்று நிறுத்தும் நீ,
உன்னை நேசிப்பதை நிறுத்தி விடாதே.
சாகும்பொழுது நாம் வாழ்ந்த சுவடுகள் வேண்டும்,
வாழும் பொழுது அந்த சுவடுகளை உருவாக்கும் நெடுஞ்சுவாசம் வேண்டும்.
புன்னகையோடு செயல்படுவோர் நகையாடல்களை நெருங்க விடார்,
மதிப்பில்லாத வார்த்தைகளுக்கு மனதில் இடம் கொடார்.
மென்மையான சொற்களால் - சிக்கலை சுலபமாக்குவார்,
உலகின் சத்தங்களை பின்னணி இசையென எடுத்துக் கொள்வார்.
"அவர்கள் பாதை -
பாராட்டுக்கு அல்ல,
பயணத்துக்கே..."
நதி கற்களை முத்தம் கொடுத்து வழி காணுவதைப் போல்,
விதிமுறைகளை கடை பிடித்து தத்தம் காரியத்தை நிறைவேற்றுவர்.
"மழை வரும் முன்னே அணி வகுக்கும் மேகம் போல,
பணிவரும் முன்னே எழுச்சி கொள்கின்றது அவரது தேகம்."
(சேலத்தைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர் கவிதா உடையப்பன் ரத்தினா செந்தில்குமார் தலைமையிலான திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றவர். தன்னம்பிக்கை பேச்சாளரும் கூட)