லஞ்சம் தஞ்சம்!
- கவிதா உடையப்பன், சேலம்
பதைபதைத்தது நெஞ்சம்
கொடுத்து விட்டேனடி லஞ்சம்
நெறியல்ல என்று தெரிந்தும்
தழுதழுத்தது குரல்
முன்வரிசையில் நின்றோர் வினவ
சுய மானம் நழுவ
என் செய்வேனடி நானும்?
நேர் வழியில் செல்ல, நேரமில்லையடி
உரிய முறையில் செல்ல உதவும் கரங்களில்லையடி
துடிதுடித்தது எனது நா
அந்த ஊழியரைப் பிடித்து உலுக்க
இங்கு சாமான்யனோ பரிதவிக்க
ஏனடா இந்நிலை?
மனித பேராசையினால் வந்த சூழ்நிலை!
மாறும் ஒரு நாள் வானிலை
கிடுகிடுத்தது வானம்!
அக்கிரமங்களை எச்சரித்து
சத்தியப்பாதையை எடுத்துரைத்து
எப்படித்தான் இயங்குவது?
ஈட்டுவது நல்வழியிலா என்று இல்லத்தாரும் பரிசீலிப்போம்
"என் பணி என் கடமை" என்றே நாம் செயல்படுவோம்
மன சஞ்சலம் கலைந்து
உயர் லட்சியமதில் நனைந்து
தஞ்சம் அடைவோமே அறவாழ்வில்!
(சேலத்தைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர் உடையப்பன் ரத்தினா செல்வகுமார் தலைமையிலான திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றவர். தன்னம்பிக்கை பேச்சாளரும் கூட)