நல்லதோர் வீணைசெய்தே அதை .. நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ!
- கவிஞர் பொ. கிருபாவதி, சென்னை
எந்தக் குழந்தையும் நல்லகுழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே
அவன் நல்லவனாவதும் தீயவனாவதும்
அன்னை வளர்ப்பினிலே! என்றான் கவிஞனொருவன்
ஆனால் இன்று!
நல்லவனாவதும் தீயவனாவதும் திறன் பேசி கைகளிலே !
சோறுண்ணவும் அலைபேசி
தூங்கிடவும் திறன்பேசி
பொழுதுபோக்கிட கைபேசி
அறிவை வளர்த்திட அலைபேசி என
அலைபேசி கடலில் மூழ்கியே அழிகிறதே
இச்சமுதாயம்!
ஆயிரம் கனவுகளுடன் பெற்ற பிள்ளை
அறிவுரைகளை ஏற்க மறுத்து
நம்மை அலட்சியப்படுத்திட
வாசமில்லா மலர்களாய்
வெப்பமில்லா சூரியனாய்
குளிர்ச்சியில்லா சந்திரனாய்
தென்றலில்லா காற்றாய்
மழையில்லா மேகங்களாய்
வாழ்க்கையை செயற்கையாய் வாழ்கிறதே!
தாமரை இலை நீரென வாழ்கிறதே
இயந்திரங்களோடு இயந்திரமான வாழ்க்கை
அலைபேசி எனும் அரக்கனால்
எதிர்காலச்சமுதாயமே கேள்விக்குறியானதே?
எல்லாம் அறிந்தும் ஏதும் செய்ய இயலா நிலையில் நாம்
நாம் கூறும் எதையும் ஏற்க இயலாநிலையில் இன்றைய சமுதாயம்
சுமக்கும் போதும் பெற்றெடுத்தபோதும்
பலபல கனவுகளுடன்
குழ்நதையை உருவாக்க நினைத்தோம்
எல்லாமே கானல்நீராய் மாறிட
துடுப்பில்லா படகாக
காற்றில் தடுமாறும் கொடியாக
இசையில்லா வீணையாக
இன்றைய குழந்தைகள்
நல்லதோர் வீணைசெய்தே
அதை நலங்கெட புழுதியில் எறிந்துவிட்டோம்
அதை மீட்டிட வரியொன்று கூறாயோ சிவசக்தி!